ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்

பதிகங்கள்

Photo

இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி
மலர்தொட்டுக் கொண்டேன் வரும்பலன்காணேன்
தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளம்
தலைதொட்டுக் கண்டேன் தவங்கண்ட வாறே.

English Meaning:
Tapas is the Supreme Means

I gathered the tender leaves and flowers variegated
I wove a garland
All for my Father;
Yet I saw not the gushing waters of Grace;
I scanned the lofty lores of scriptures
And my heart ebbed low;
But I stood in tapas
And touched Cranium heights
Lo! I met mine Lord.
Tamil Meaning:
தலையாய நூல்களை அறியும் முன் நான் சிவனுக் கென்று கருதியே பச்சிலையைக் கிள்ளியும், பூவைப் பறித்தும், சில மலர்களைத் தொடுத்தும் பணிபுரிந்தேன். ஆயினும் அவற்றால் யாதொரு பயனும் விளையக் காணவில்லை. அந்நூல்களை அறிந்த பின் சிவனிடத்தே என் உள்ளம் குழைந்து நின்றது அதனால், சிவத்தைத் தலைப்பட்ட அனுபவத்தை அடைந்தேன். ஆகவே, நான் தவத்தை உணர்ந்தவாறு அதுவேயாயிற்று.
Special Remark:
`பச்சிலையும், பூவும் முதலியன கொண்டு வழி படுதலும் அறிவின்வழிப் பட்டபொழுதே உண்மைத் தவமாம்` என்பது இதனுட் கூறப்பட்டது.
``கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடையார்`` l
எனவும்
``பன்னும் பனுவற் பயன்தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே`` 8
எனவும் வந்தனபோல்வன காண்க. இரண்டாம் அடியில், `தொடுத்து` என்பது, ``தொட்டு`` என மருவிநின்றது. `வளைத்துக்கட்டி` எனினுமாம். கொள்ளுதல் மேற்கொள்ளுதல். அதற்கு, `பணி` என்னும் செயப்படு பொருள் வருவிக்க. பலன், உலகியலின் வேறானதோர் அனுபவம். அஃது அறிவில்வழி உளதாகாது என்பதாம். தலைதொட்ட - தலை யாய இடத்தில் பொருந்திய. ஈற்றில் நின்ற தலை, சிவம். `அதுவே தவங்கண்டவாறு` என எழுவாய் வருவித்து முடிக்க.
இதனால், `மேற்குறித்த தவந்தானும் அறிவோடு கூடாதவழித் தவமாகாது` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது.