
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்
பதிகங்கள்

மனத்துரை மாகடல் ஏழுங்கை நீந்தித்
தவத்திடை யாளர்தம் சார்வத்து வந்தார்
பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலு மாமே.
English Meaning:
Follow Tapasvins and Meet GodSwimming across the seven seas of the mind
The tapasvins true their heaven reached;
Let them that are tossed in the sea of births about
Listen but to their Commandments holy,
Then can they see Nandi, face to face for sure.
Tamil Meaning:
மனத்தின்கண் நிறைந்து நிற்கின்ற ஆசையாகிய பெரிய எழுகடல்களைக் கையாலே நீந்திக் கடந்து தவத்தில் நிற்பவரே தமக்கு என்றும் சார்பாகும் மெய்ப்பொருளை அடைவர். அது மாட்டாதே தவம்செய்து பிறவியில் அழுந்துவோர் மேற்குறிய அத் தவத்தோரை வழிபடுவாராயின், அவர் சிவனைத் தம் கண்முன் னாகவே காணுதலும் கூடும்.Special Remark:
``மனத்துறை மாகடல் ஏழ்`` என்பது அற்புத உருவகமாய் ஆசையைக் குறித்தது. அதனை முற்றும் விடுத்த அருமை தோன்ற, ``கை நீந்தி`` என்றார். தவம் இன்னதென்பது மேற்கூறப்பட்ட மையின், வாளா, ``தவத்திடையாளர்`` எனவும் அஃதல்லாத பிற செயலாளரை ``பவத்திடையாளர்`` எனவும் கூறினார். ``அவர் பணி கேட்கின் முந்தலும் ஆம்`` என்றது, `கேளாதவழி முந்துதல் கூடாது` என வலியுறுத்தவாறு. இதனானும், முன்னை மந்திரத்தில் ``கூடி`` என்றது, `சிவனடியாரோடு கூடி` என்றதே எனல் விளங்கும். இதனுள் உயிரெதுகை வந்தது.இதனால், `மேற்கூறியதவமும் ஆசையறாதவழித் தவமாகாது` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage