ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்

பதிகங்கள்

Photo

ஓதலும் வேண்டா உயிர்க்கு யிருள்ளுற்றால்
காதலும் வேண்டாமெய்க் காயம் இடங்கண்டால்
சாதலும் வேண்டா சமாதிகை கூடினால்
போதலும் வேண்டா புலன்வழி போதார்க்கே.

English Meaning:
When You Need not Renounce

You need not pray, if the Soul of Souls enters in you;
You need not adore, if Siva abides true in you;
You need not die, if Samadhi you attain,
You need not renounce, if you go not the way of the senses.
Tamil Meaning:
அறிவுக்கு அறிவாய் உள்ள பேரறிவாகிய சிவத்தைத் தன் அறிவினுள்ளே ஒருவன் தலைப்பட்டு விடுவானாயின் அதன்பின் அவன் ஞானநூல்களை ஓதவேண்டுவதில்லை. `பர காயம்` எனப்படும் திருவருளையே ஒருவன் தனக்கு நிலைக்களமாகக் கண்டுவிட்டால், பின்பு அவன் தான் அதனின், வேறாய் நின்று அதனைப் பெற அவாவ வேண்டுவதில்லை திருவருள் கண்ணாகச் சிவத்தை அறிந்து அதிலே அழுந்தி நிற்கும் நிலை ஒருவனுக்கு இப்பொழுது கூடுமாயின், அவன் இவ்வுடல் வீழ்ந்தொழிய வேண்டும் என இதனை வெறுக்க வேண்டுவதில்லை. சிவயோக நிலையினின்று மீளுதல் இல்லாதார்க்குப் புலன்கள் வந்து பற்றும் வழிகளாகிய பொறிகள் செயற்படாது கெட வேண்டுவதில்லை.
Special Remark:
`சாத்தியம் கைவந்தபின் சாதனம்வேண்டா என்பதனைப் பல்லாற்றானும் வகுத்துக் கூறியவாறு.