ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்

பதிகங்கள்

Photo

படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்
கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும்
விடரடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில்
உடரடை செய்வதோ ருன்மத்த மாமே.

English Meaning:
Tapas is Single-mindedness

To the devout tapasvins, who in dishevelled locks sit
Lord lets no harm happen,
He His Grace lends;
Any you look at tapas
Of those that all trials overcame,
Know you, it is by their oneness of mind in tapas
They blocked the births to come.
Tamil Meaning:
விரிந்த சடைமுடியோடு பெரிய தவத்தை மேற் கொண்ட அடியவர்க்கு யாதொரு துன்பமும் வாராதவாறு இறைவன் தனது அருளை வழங்குவன். அவ்வருளைத் தெளியாது தமக்குத் துன்பம் வராமல் மணி மந்திர ஔடதங்களால் காப்புச் செய்து கொள்வ தில் காலம் போக்குவாரது தவ நிலையை நோக்கின் அது, துன்பம் வந்து அடையும் வழியைத் தாமே ஆக்கிக்கொள்வதோர் பித்தச் செயலாகவே முடியும்.
Special Remark:
தவ ஒழுக்கத்தோடு தவவேடமும்பூண்டாரது நிலை சிறப்புடையதாகலின், அநநிலையுடையாரை, ``மாதவம் பற்றிய பத்தர்`` என்றார். இதனானே, ``சடை` என்பதில் தொக்குநின்ற உருபு, `அன்போடு வரவேற்றான்` என்பதுபோலத் தவம் மேற்கொள்ளு தலைச் சிறப்பித்து நின்றமை விளங்கும். மாதவம் பற்றிய பத்தர்க்கு இடர் அடையா வண்ணம் ஈசன் அருளுதலை, அருச்சுனற்குப் பன்றி யால் இடர் வாராவண்ணம் காக்கச் சென்றமை முதலிய வரலாறுகளும், நாவுக்கரசருக்குச் சமணர்கள் விளைத்த இடர்கள் அவரை யாதும் செய்யாதொழிந்தமைமுதலிய அனுபவங்களும் இனிது விளங்கும். விடர் - பிறப்பு; அது தவத்தின் வேறாய செயல்களை குறித்தது. ``அடை`` இரண்டும், `குடல் - குடர்` என்பதுபோல லகரத்திற்கு ரகரம் போலியாய் வந்தன. ``உடர்`` என்பதும் முதனிலைத் தொழிற் பெயர்கள், ``உடம்போடுயிரிடை நட்பு`` l என்பதில், நட்பு அல்லாத கூட்டத்திளை `நட்பு` என்றதுபோல, மெய்த்தவம் அல்லாத தவத் தினை ``மெய்த்தவம்`` என நகை உள்ளுறுத்துக் கூறினார். உன்மத்தம் போல்வதனை ``உன்மத்தம்`` என்றார்.
இதனால், `திருவருளைத் தெளியாது மணிமந்திர ஔடதங்களால் நலனடைய முயல்வாரது தவம் தவமாகாது` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது.