ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்

பதிகங்கள்

Photo

தவம்வேண்டும் ஞானந் தலைப்பட வேண்டில்
தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில்
தவம்வேண்டா அச்சக சன்மார்க்கத் தோர்க்குத்
தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே.

English Meaning:
When Tapas is Needed

Tapas you need, if Jnana you aspire;
Tapas you need not, when Jnana Samadhi you attain;
Tapas you need not, when you are in Sahamarga of Yoga;
Tapas they seek not, who the Self to transform Know not.
Tamil Meaning:
ஞானத்தைப் பெறுதற்பொருட்டே தவம் வேண்டப் படுகின்றதாதலின், அந்த ஞானப்பேறு கிடைத்துவிடின், அதன்பின் தவம் வேண்டாததாகும். ஆகவே, சிவயோக சிவபோக நிலையை எய்தினார்க்குத் தவம் கடப்பாடன்றாம். அதனால் சிலவிடத்து, `தவம் வேண்டா` எனச் சொல்லப்படும் சொல்லினது பொருளைப் பலர் அறியமாட்டார்.
Special Remark:
``சமாதி`` என்றது பேற்றை. ``அச் சகமார்க்கம்`` எனச் சிறப்பித்துக் கூறினமையின், அது ஞானகுருவின் அருள்பெற்றபின் நிற்கும் சிவயோகமேயாயிற்று. இதற்குமுன் ``வேண்டா`` என்றது, ``நியதமன்று`` என்றவாறு. அஃதாவது சிவயோக சிவபோக நிலையிற் சென்றார்க்கு உலகியல் உணர்வு தோன்றாது மறைதலின், அவரது தவச் செயல்களும் ``உறங்கினோன்கை வெறும்பாக்கெனத் * தாமே தவிரு மாயின், அஃது அவர்க்குக் குற்றமாகாது என்பதாம். அங்ஙன மாகவே, `அத்தகை யோர் அந்நிலைகளில் நீங்காது நிற்கவே முயலல் வேண்டு மன்றி, மீளத் தவநிலையில் நிற்க முயலுதல் கூடாது` என்பதும், `மீட்சி தானே உள தாயபொழுதே மீள முன்போல உலகியல் வந்து சூழாத வாறு தவ நிலையில் நிற்றல் வேண்டும்` என்பதும் பெறப்பட்டன. இவையெல்லாம் குருவருள் பெற்றார்க்கன்றி அறியலாகாமையின், ``தவம் வேண்டா மாற்றந் தனையறியாரே`` எனக்கூறி, `அதனைக் குரு முகமாக அறிந்துகொள்க` எனக் குறிப்பால் முடித்தார். இறுதியிலுள்ள ``தவம் வேண்டா`` என்னும் தொடர் தன்னையே குறித்துநின்றது.
இதனால், தவம் ஞானத்திற்குச் சாதனமாவதன்றிச் சாத்திய மாகாமை கூறி, அதனது நிலை இனிது விளக்கப்பட்டது.