ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்

பதிகங்கள்

Photo

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோலம் அஞ்செழுத் தாமே. 

English Meaning:
The Prana breath
The pair of damsels within body-house
Runs in and out constant;
If twelve matras inhaled
Eight matras exhaled,
The four matras retained
Shall make you divine in Siva.
Tamil Meaning:
ஆடரங்கு ஒன்றை அமைத்து, அதனுள் ஆடப் புகுந்த மங்கையர் இருவர் தாங்கள் ஆடும்பொழுது பன்னிரண்டங்குல தூரம் முன்னோக்கிச் செல்கின்றனர்; ஆயினும், பின்னோக்கி வரும் பொழுது எட்டங்குல தூரமே வருகின்றனர். ஆகவே, அவர் ஒவ்வொரு முறையிலும் நாலங்குல தூரம் கூடத்தை விட்டு நீங்கு பவராகின்றனர். (இவ்வாறே அவர்களது ஆட்டம் நடைபெறு மாயின் எப்பொழுதாவது அவர்கள் அவ்வாடரங்கை முழுதும் விட்டு அப்பாற் போதலும், மீள அதன்கண் வாராமையும் உளவாதல் தப்பா தன்றோ!) ஆகையால், ஒவ்வொரு முறையும் அந்த நாலங்குல தூரமும் அவர்கள் மீண்டு வருவராயின், அக் கூடத்தின் அழகு என்றும் அழியா அழகாய் நிலைத்திருக்கும்.
Special Remark:
\\\"ஓடுவர் பன்னிரண்டங்குலம்; மீளுவர் எண்விரல்\\\" என நிரல்நிரையாக்கிப் பின், \\\"நீடு உவர் இவ்வாற்றால் நால் விரல் கண்டிப்பர்; (அதனையும் அவர்) கூடிக்கொளின், கோலம் அஞ் செழுத்தாம்\\\" எனக் கூட்டி உரைக்க. நீடு உவர் - ஆட்டத்தில் நீடு நிற்கின்ற இவர். கண்டிப்பர் - துணிப்பர். மந்திரங்களே அழிவில்லன; அவற்றுள்ளும் அஞ்செழுத்து மந்திரம் அழிவிலதாதலின், அழியாமை குறித்தற்கு, அஞ்செழுத்தாக்கி அருளிச்செய்தார். அஞ்செழுத்து, திருவைந்தெழுத்தும், வியட்டிப் பிரணவமுமாம். இனி, ஓவியத்தின் மறுபெயராகிய `எழுத்து\\\' என்பதும், \\\"கோலம்\\\" என்பதுபோலவே ஆகுபெயராய் அழகினைக் குறித்தது எனக் கொண்டு, ஏகாரத்தை எதிர்மறை வினாவாக்கி, `அழியுமோ என்று அஞ்சப்படும் அழகாகுமோ! ஆகாது\\\' என உரைத்தலுமாம். இனி, இதற்கு \\\"அஞ்செழுத்துருவமாதற்கு ஏற்றதாகும்\\\" என உரைத்தலுமாம். ஆடல் மங்கையர் அப்பாற்போய், மீளவும் அதனுள் வாராதொழியின், ஆடரங்கு அழிந்தொழியும் என்பதாம்.
கூடம், உடம்பு, ஆடல் மங்கையர், இரு மூக்கு வழியாக இயங்குகின்ற பிராண வாயு, \\\"மக்களது மூச்சுக் காற்று இயல்பாக வெளிச் செல்லும் பொழுது பன்னிரண்டங்குல அளவு செல்லும்\\\" என்பதும், \\\"மீண்டு அஃது உட்புகும்பொழுது, முன் சென்ற அளவு புகாது, இயல்பாக எட்டங்குல அளவே புகும்\\\" என்பதும் யோகநூல் வரையறை. எனவே, \\\"வெளிச் சென்ற காற்றில் மூன்றில் இரண்டு பங்கே உட்புக, ஒருபங்கு இழப்பாகின்றது\\\" என்பதும், `அவ் இழப்பினாலே நாள்தோறும் வாழ்நாள் அளவு குறைந்துகொண்டே வருகின்றது\\\' என்பதும், `அவ்வாறாகாது தடுப்பது பிராணாயாமம் என்பதும்\\\' கருத்தாதல் அறிந்துகொள்ளப்படும்.
இதனால், பிரணாயாமத்தால் வாழ்நாள் நீட்டிக்குமாறு தெரித்துணர்த்தப்பட்டது.