ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்  

பதிகங்கள்

Photo

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே. 

English Meaning:
Inhalation, Exhalation, and Retention both ways
The Science of Breath thus consisting
They know not;
They who know the Science of Breath
Are destined to spurn the God of Death.
Tamil Meaning:
பிராண வாயுவை இடை நாடியால் உட்புகுத்திப் பூரிக்கும் கணக்கையும், பிங்கலை நாடியால் இரேசிக்கும் கணக்கையும் அறிந்து, அதனானே கும்பிக்கும் கணக்கையும் நன்கு அறிகின்றவர் இல்லை. அக்கணக்குகளை ஆசிரியன் அறிவுறுக்கும் யோக நூல் வழியாக மேற்கூறியவாறாக நன்கு உணர்பவர்கட்குக் கூற்றுவனை வெல்லும் பயன் அம்முறையிற் பயிலுதலேயாய் முடியும்.
Special Remark:
இரு கால் - முதற் காற்று, (இடை நாடி வழியது) கடைக் காற்று (பிங்கலை வழியது) என்பன. இது தொகை நிரல்நிறை. ``பூரிக்கும்`` என்பதன்பின், `இரேசிக்கும்` என்பது எஞ்சி நின்றது. `பூரிக்கும், இரேசிக்கும், பிடிக்கும்` என்னும் எச்சங்கள், `கணக்கு` என்னும் ஒரு பெயர் கொண்டன. ``இரு கால்`` மேலே கூறப் பட்டமையின், பின்னர் ``காற்று`` என்றது இடைக்காற்றாதல் (நடுநாடி வழியது) விளங்கும். குறி - குறிக்கோள்; இலட்சியம். துணிவுபற்றி, வழியையே பயனாக அருளினார்.
இதனால், பிரணாயாமத்தைச் செம்மையாகச் செய்தலின் அருமை கூறப்பட்டது.