ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்  

பதிகங்கள்

Photo

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே. 

English Meaning:
The mind is the master of senses five;
He is the head of the body habitat;
There is a steed he rides to his destined goal;
The masterly one the steed carries,
The feeble one it throws away
—That steed the Prana breath is.
Tamil Meaning:
ஐவர் பணியாளர்க்குத் தலைவன் ஒருவன்; அவனே அவ்வூர்க்கும் தலைவன். அவன், தான் நலன் அடைதற் பொருட்டுத் தனதாகக் கொண்டு ஏறி உலாவுகின்ற குதிரை ஒன்று உண்டு. அது வல்லார்க்கு அடங்கிப் பணிசெய்யும்; மாட்டார்க்கு அடங்காது குதித்து அவரைக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடும்.
Special Remark:
`ஆகவே, அதனை அடக்க வல்லராதலைப் பயிலுதலே ஆண்மையுடையோர்க்கு அழகாகும்` என்பது குறிப்பெச்சம்.
இத்திருமந்திரம் பிசிச் செய்யுள். இதனை, `ஐவர், ஐம் பொறிகள்; நாயகன்; உயிர்க்கிழவன்; ஊர், ஐம்பொறியும் தங்கி யுள்ள உடம்பு; குதிரை பிராணவாயு; துள்ளி விழுத்தல், வாழ்நாள் முடிவில் அவரறியாதவாறு விட்டு நீங்குதல்` என விடுத்துக் கண்டுகொள்க. ``மெய்யர், பொய்யர்`` என்பன, வன்மை மென்மை பற்றி வந்தன. `பொய்யரை வீழ்த்திடும்` எனவே, `மெய்யரை வீழ்த்தாது செல்லும்` என்பது பட்டு, மெய்யர்க்கு வாழ்நாள் நெடிது செல்லுதலும், அவர் விடுத்து நீக்க நீங்குதலும் உளவாதலை உணர்த்தி நிற்கும்.
இதனால், பிராணாயாமம் செய்வார் மக்களுடம்பை நெடிது நிறுத்திப் பயனடைதல் கூறப்பட்டது.