ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்  

பதிகங்கள்

Photo

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நால்அதில்
ஊறுதல் முப்பத் திரண்ட திரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.

English Meaning:
Purakam is to inhale by left nostril matras six and ten
Kumbhakam is to retain that breath for matras four and six
Rechakam is to exhale thereafter for mantras two and thirty
Thus alternate from left to right and right to left
With Kumbhakam in between.
Tamil Meaning:
இது முதல் பிராணாயாமம் செய்யும்முறை கூறுகின்றார்.
(பிரணாயாமம், ``பூரகம், கும்பகம், இரேசகம்`` என்னும் மூன்று வகையினை உடையது. அவற்றுள்,) `பூரகம்` என்பது வெளியே உள்ள தூயகாற்று உடலினுள் புகுதற்கு உரித்தாய செயல். (எனவே, உயிர்க்கிழவன் தனது முயற்சியால் அக்காற்றினை உள்ளாக இழுத்தலாம்) இதன் உயர்ந்த அளவு பதினாறு மாத்திரை. இஃது இடை நாடியால் இடமூக்கு வழியாகச் செய்யற்பாலது. ``கும்பகம்`` என்பது உள்ளே புகுந்த காற்று அங்கே அடங்கி நிற்றற்கு உரித்தாய செயல். (எனவே, அங்கே நில்லாது ஓடுகின்ற அதனை அங்ஙனம் ஓட வொட்டாது தடுத்து நிறுத்தலாம்) இதன் உயர்ந்த அளவு அறுபத்து நான்கு மாத்திரை. ``இரேசகம்`` என்பது, உள் நின்ற காற்று வெளிப் போதற்கு உரித்தாய செயல். (எனவே, உயிர்க்கிழவன் அதனை வெளிச் செல்ல உந்துதலாம்) இதன் உயர்ந்த அளவு முப்பத்திரண்டு மாத்திரை. இம்மூன்றும் ஒருமுறை இவ்வளவில் அமைவது ஒரு முழு நிலைப் பிராணாயாமமாகும். பூரகம் முதலிய மூன்றும் தம்முள் இவ்வாறு இவ்வளவில் ஒத்து நில்லாது ஒன்றில் மாறுபடுதலும், பிரணாயாமம் புரைபடுதற்கு ஏதுவாம்.
Special Remark:
``பூரகம் வாமத்தால் ஈரெட்டாக ஏறுதல்; கும்பகம் அறுபத்து நாலாக அதில் ஆறுதல்; இரேசகம் முப்பத்திரண்டாக ஊறுதல், ஒன்றின்கண் மாறுதல் வஞ்சகமாம்`` எனக் கூட்டுக. `பூரகம் இடைநாடியால்` எனவே, `இரேசகம் பிங்கலையால்` என்பது சொல்லாமை அமைந்தது. `ஏறுதல்` முதலிய மூன்றும் காரிய ஆகு பெயராய், அவற்றிற்குரிய செயல்களை உணர்த்தின. மாத்திரைகள் மந்திரங்களின்வழி அறியப்படும். அம்மந்திரங்கள் அவரவர் தம் தம் குருமுகத்தால் பெறற்பாலர். அனைவர்க்கும் பொதுவாக நிற்பது ``பிரணவம்`` எனப்படும் ஓங்காரம். அதனை ஒரு மாத்திரை வேண்டும்பொழுது ``உம்`` என்றே கொள்வர். இது சமட்டியாகக் கொள்ளும் முறை. இதனையே, ``அம், உம்`` எனப் பகுத்து வியட்டியாகக் கொள்வர். சமட்டியாக ஓதுபவர் இரண்டு மாத்திரைக்கு `ஓம்` என்றும், அதனின் மிக்க மாத்திரைக்கு அவ்வளவான அள பெடை கூட்டியும் ஓதுவர். ``அம்`` என்பதன்பின் ``சம்`` என்பது கூட்டி, ``அம்ச மந்திரம்`` எனக் கொண்டு, ஓதுதலைப் பெருவழக்காகச் சொல்வர். `ஓம்` என்பது போலவே, ``ஆம், ஈம், ஊம், ஏம், ஐம், ஔம்`` என்பவனவும், ``அம், உம்`` என்பன போலவே, ``இம், எம், ஓம்`` என்பனவும் முதல் (மூல) மந்திரங்களாம் என்பதனை நாயனார் நாலாந் தந்திரத்துள் அருளிச் செய்வார். மந்திரங்களில் ஒற்றெழுத்தின் மாத்திரையைக் கணக்கிடுதல் இல்லை. மந்திரங்களைக் கணிக்கும் முறை ``வாசகம், உபாஞ்சு, மானதம்`` என மூன்று. வாசகம், தன் செவிக்கும், பிறர் செவிக்குங் கேட்குமாறு வெளிப்படக் கூறுதல். உபாஞ்சு, நாப்புடை பெயருமளவாக மெல்ல உச்சரித்தல். இதனை ``முணுமுணுத்தல்`` என்றல் வழக்கு. மானதம், நாவாற் கூறாது மனத்தால் நினைத்தல். இவற்றுள், ``வாசிகம் சரியையாளர்க்கும், உபாஞ்சு கிரியையாளர்க்கும், மானதம் யோகியர்க்கும் உரியன`` எனப் பெரும்பான்மை பற்றிக் கூறப்படும் என்க. மந்திரத்தில் பற்றில்லாதவர் செய்யும் பிரணாயாமம் பெரும்பயன் தாராது.
ஈரெட்டு முதலிய எண்கள், அவ்வவ்வளவினதாகிய மாத்திரையைக் குறித்தன. `ஊருதல்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. `ஊருதல்` என்பதே பாடம் எனினுமாம். ஊருதல் - மேலே (வெளியே) செல்லுதல். ``முப்பத்திரண்டது`` என்றதில், அது பகுதிப் பொருள் விகுதி. `மாறுதலும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத் தலாயிற்று. வஞ்சகம் - பொய்; போலி. பூரிக்கும் அளவில் நான்மடங்கு கும்பித்த வழியே அக் காற்று உடற்குப் பயன் படுவதாகும். எனினும், பூரித்த காற்று முன்னுள்ள காற்றுடன் பயன்பட்டபின் நிலை வேறு படுதலால், மேற்குறித்த கால அளவில் இரேசகம் வேண்டப்படுகிறது.
இதனால், பிரணாயாமத்தின் இயல்பு கூறப்பட்டது.
இதனுள், `கும்பக மாத்திரை பூரக மாத்திரையின் நான் மடங்காம்` என்பதும், `இரேசக மாத்திரை கும்பக மாத்திரையின் அரை மடங்காம்` என்பதும் உய்த்துணர வைக்கப்பட்டவாறு அறிந்து கொள்க. `இஃது உயரளவு` எனவே, `அவ்வளவை எட்டுதற்கு, முதற் கண் சிறிது சிறிதாக அம்முறையிற் பயிலுதல் வேண்டும்` என்பது பெறப்பட்டது. பிராண வாயுவை இவ்வாறு நெறிப்படச் செய்வதால், உடல் தூய்மை பெற்று, ஆற்றல் மிகுந்து, நற்பண்புகளுக்கு இடமாகும்.