ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்  

பதிகங்கள்

Photo

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்;
கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்;
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.

English Meaning:
Faster than bird that steed flies,
If that steed is controlled, far headier than wine the pleasure it gives;
It infuses vigour, dispels laziness,
True we say this, let the wise listen.
Tamil Meaning:
பறவையினும் விரைய ஓடுகின்ற பிராணனாகிய அக்குதிரையின்மேல் ஏறிக்கொண்டால், களிப்பிற்கு வேறு கள்ளுண்ண வேண்டுவதில்லை; அது தானே மிக்கக் களிப்பைத் தரும். அக்களிப்பினாலே துள்ளி நடக்கச் செய்யும்; சோம்பலை நீக்கச் செய்யும்; இவ்வுண்மையை, நாம் சொல்லியவாறே உணரவல்ல வர்க்கே சொன்னோம்.
Special Remark:
மேற்கொள்ளுதல், ஏறிச்செலுத்துதல். அஃது இங்கு அடக்கி ஆளுதலைக் குறித்தது. உடலின் உள்ளுறுப்புக்கள் யாவும் - சிறப்பாக இருதயம் - நன்கு செயற்படுதலும், படாமையுமே உடலின் வலிமைக்கும், வலிமை இன்மைக்கும் காரணம். அவ்வுறுப்புக்களின் நன்மை, குருதி ஓட்டத்தின் தன்மையைச் சார்ந்தது. குருதி ஓட்டம் மூச்சுக் காற்றின் இயக்கத்தை ஒட்டியது. ஆகவே, அவ் இயக்கத்தை வழிப்படுத்தினால், உடல் வலிமை பெற்று, உள்ளமும் கிளர்ச்சி அடைவதாம்.
இதனால், பிராணாயாமம் உள்ளக் கிளர்ச்சியைத் தருதல் கூறப்பட்டது.