ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்  

பதிகங்கள்

Photo

மேல்கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து
மாலாகி உந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே. 

English Meaning:
In Purakam inhale breath deep
To pervade up, down and middle
In Kumbhakam retain it around the navel centre;
In Rechakam it is absorbed within in due measure
They who practise the Science of Breath thus
Reach the Grace of Lord
Who consumed poison deadly.
Tamil Meaning:
பிராண வாயுவை உடல் முழுதும் பரவுமாறு பூரகத்தையும், அந்த வாயுத் தூய்மையாயிருத்தற் பொருட்டு இரேசகத்தையும், நீண்ட வாழ்நாளையும், மிக்க ஆற்றலையும், பெறுதற் பொருட்டுக் கும்பகத்தையும் மேற்கூறிய முறையிற் செய்து பிராணவாயுவை வசப்படுத்தினால், இப்பிறப்பிற்றானே சிவபெரு மானது திருவருளைப் பெறலாம்.
Special Remark:
``பாலாம்`` என்பதனை, ``பால்போல ஆகின்ற`` என விரிக்க. பால் தூய்மைக்கு உவமை. ``ஆம்`` என்ற பெயரெச்சம், ``இரேசகம்`` என்னும் ஏதுப் பெயர் கொண்டது. ``இரேசகத்தால் உட் பதி வித்து`` என்றது, இரேசகம் இல்லாது ஒழியின் கும்பகம் தூய்மை யாகாது என்பதனைப் புலப்படுத்தி, இரேசகத்தின் இன்றியமை யாமையைக் குறித்தது. நெடுங்காலம் வாழ்தலால் `அமரர்` எனப்படும் தேவர் பலருள்ளும் வாழ்நாள் மிக்கவன் மாயோனாதலின், ``மாலாகி`` என்றது, நெடுங்காலம் வாழ்தலைக் குறித்தது. ``ஆகி`` என்னும் ஆக்கச்சொல் உவமை மேல் நின்றது. உலக காரணன் ஆகத்தக்க ஆற்ற லால் நான்முகனை உந்தி வழித்தோற்றுவித்தோனாதல்பற்றி, உந்தித் தானத்தில் கும்பகம் செய்து ஆற்றல் மிகுதற்கும் அவனையே உவமை யாகக் கூறினார். வாங்குதல் - வளைத்தல். ``இப்பிறப்பிலே`` என்பது ஆற்றலால் கொள்ளக்கிடந்தது. நெடுங்காலம் வாழ வேண்டுதற்குக் காரணம் கூறுவார், ``ஆலாலம் உண்டான் அருள்பெறலாமே`` என்றார்.
இதனால், பூரகம் முதலிய மூன்றின் பயன் வகுத்துணர்த்தப் பட்டது. கும்பகத் தானம் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டது.