ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்  

பதிகங்கள்

Photo

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே. 

English Meaning:
Inhaling six and ten matras by left nostril
Retaining four and sixty in the Homa-pit of the navel
Exhaling two and thirty by the right nostril,
They who control breath thus,
Have verily seen the Light of Truth.
Tamil Meaning:
பூரக இரேசகங்களை முற்கூறியவாறு இடைகலை பிங்கலைகளால் செய்தலே முறையாம். கும்பகத்தை ஓமத்தானமாகிய உந்தித் தானத்திற் செய்தலே முறையாம்.
Special Remark:
`உண்மை` என்பது ``இவ்விரண்டு`` என்பதனோடும் இயையும். ``வாமத்தில் பூரித்து, பிங்கலைக்கண் இரேசித்து ஆக, இவ்விரண்டு உண்மை; ஓமத்தால் கும்பிக்க உண்மை`` என்க. ஆதல்- முடிதல். `இவ்விரண்டு` என்ற சுட்டு, பூரக இரேசகங்களைச் சுட்டிற்று. உண்மை - செம்மை. `ஓமம்` என்பது ஆகுபெயராய் அதற் குரிய இடத்தை உணர்த்திற்று. அகப் பூசையில் இருதயம் பூசைத் தானமாகவும், நாபி ஓமத்தானமாகவும், புருவ நடு தியானத் தானமாகவும் கொள்ளப்படுதல் அறிக. ``ஓமத்தால்`` என்பது உருபு மயக்கம். இதற்கு ``ஓம்`` என்னும் அம்மந்திரத்தால் எனவும் உரைப்பர். ``ஆக, கும்பிக்க`` என்ற எச்சங்கள். ``உண்மை` என்னும் குறிப்பு வினை கொண்டன. ``உண்மையது`` எனற்பாலதனை `உண்மை` என்றே கூறுதல் பிற்கால வழக்காயிற்று. ஆகவே, அப் பண்புச் சொல் பண்பிமேல் நின்றதாக உரைத்துக் கொள்ளப்படும். ``கும்பிக்க`` என்பதன்பின், ``அஃது`` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
இதனால், மேல் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டது, எடுத்தோதி வலியுறுத்தப்பட்டது. முன்னவை இரண்டும் அனுவாதம்.