ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்

பதிகங்கள்

Photo

உரையற்ற ஆனந்த மோனசொரூ பத்தன்
கரையற்ற சத்திஆதி காணில் அகாரம்
மருவுற் றுகாரம் மகாரம தாகி
உரையற்ற தாரத்தில் உள்ளொளி யாமே.

English Meaning:
Acting on Adi Sakti Svarupa Siva is Aum

He is Bliss beyond speech
He is Silentness,
He the Self-illumined Manifestness;
When He acts on Adi Sakti,
He becomes the letters A, U, and M;
And thus as Aum defying description,
He shines as the Light within.
Tamil Meaning:
(`சொரூபம்` என்பதைப் பொதுப்பட இயல்பு` - என வைத்துக் காணும்பொழுது அது, `மேனிலைச் சொரூபம், கீழ்நிலைச் சொரூபம்` என இரண்டாகும். அவற்றுள்) சிவனது மேனிலைச் சொரூபம் சொல்லைக் கடந்தது; இன்ப உருவானது. அநாதி; சிவமாவது கீழ்நிலைச் சொரூபம். `அகார உகார மகாரம்` என்னும் பகுதிகளாயும், அங்ஙனம் பகுக்கப்படாத தொகுதியாயும் உள்ள தாரக மந்திரத்தின் உள்ளொளியாகும். ஆதி; சத்தியாவது.
Special Remark:
`உரையற்ற` எனப் போந்த இரண்டில் முன்னது ``மோனம்`` என்பதனை விளக்கியது. பின்னது `வெளிப்படச் சொல்ல வாராதது` என்னும் பொருட்டாய் ஓங்காரத்தைக் குறித்தது. உள் ஒளி - அதனால் சுட்டப்படும் பொருள். `தாரகம்` என்பது இடைக்குறைந்து நின்றது, `கீழ் நிலைச் சொரூபமும் அளவுட் படாதது` என்றற்கு, ``கரை -யற்ற`` என்றார். `மருவுற்ற` என்பதில் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
சொல்லைக் கடந்ததாய், இன்பமாய் அநாதியாய், `சிவம்` என நிற்பவனே, ஆராயுமிடத்து, அகார உகார மகாரங்களின் பொருளாயும், அவை ஒருங்கு தொக்க `ஓம்` என்பதன் பொருளாயும், ஆதியாயும் `சத்தி என நிற்பான்` என்பது இம்மந்திரத்தின் பொருள். சிவம் மேல்நிலைச் சொரூபம். சத்தி கீழ்நிலைச் சொரூபம். இவ் விரண்டையும் அனுபவமாக உணர்ந்தவனே ஞானகுரு. அவனே `சொரூபம்` எனப்படுவான். கீழ்நிலைச் சொரூபத்தை மட்டும் உணர்ந்தவன் கிரியா குரு. அவனும் ஓராற்றால் `சொரூபம்` எனப் படுவான் என்றற்கு இது கூறினார். கூறவே, கீழ்நிலைச் சொரூபத்தைத் தானும் உணராதவன் குருவாகாமை விளங்கும்.
இதனால், மேல்நிலைச் சொரூப உதயமே சொரூப உதயமாதல் அன்றிக் கீழ்நிலைச் சொருப உதயமும் ஓராற்றால் சொரூப உதயமாதல் கூறப்பட்டது.
இதனையடுத்துப் பதிப்புக்களில், ``தலைநின்ற தாழ்வரைமீது தவம் செய்து`` என்னும் மந்திரம் முன் தந்திரத்து `வாய்மை` அதிகாரத்தில் வந்தது.