ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்

பதிகங்கள்

Photo

பரம குரவன் பரம்எங்கும் ஆகி
திரம்உற எங்கணும் சேர்ந்தொழி வற்று
நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத் தணைந்துநின் றானே.

English Meaning:
Parasivam is Immanent in Svarupa State

The Holy Master, Parama Guru,
As Para constant pervades interminably all;
In that immanent state,
Extends His Self-illuminating Manifestness;
When Jiva the Final Turiya State attains.
Tamil Meaning:
`குருமார்களில் எல்லாம் மேலான குருவாகிய ஞான குருவே எங்கும் நிறைந்த பரம்பொருளாவான்` என்பது நன்கறியப் பட்டது. அதற்கேற்ப அவன் தன் மாணாக்கனை விட்டு நீங்காது, அவன் செல்லுமிடமெல்லாம் சென்று நிலையாகப் பொருந்தி, கண்ட பொருள்களில் எல்லாம் அது அதுவாகும் இயல்புடைய அவனது ஆன்ம சொரூபத்தினுள் அஃது அவ்வாறாகாமல் நிலைபெற்று விளங்கும் அறிவின்பப் பொருளாய், அடைதற்கரிய துரிய நிலையில் கிடைத்திருப்பான்.
Special Remark:
என இவ்வாறு குருவின்மேல் வைத்துக் கூறினா ராயினும், ஞான குருவின்பால் ஞானத்தைப் பெற்ற நன்மாணாக்கர் எங்கும், எப்பொழுதும், எவ்வாற்றானும் அக்குருவை மறவாது அவனைச் சிவமாகவே அறிவினுள் கண்டு ஆனந்திப்பர்` என்பதே கருத்து. `அக்காட்சி வெறும் கருதுகோள் காட்சியன்று; உண்மைக் காட்சியாய்ப் பயன் தரும் காட்சியே` என்பதைத் தெளிவித்தற் பொருட்டே இம்மந்திரத்தைக் குருவின்மேல் வைத்து இவ்வாறு அருளிச்செய்தார். `எங்கும் ஆம் பரமாகி` என்க. ``ஆகி`` என்பது பெயர். ஒழிவு - விட்டு நீங்குதல். `எங்கணும் ஒழிவற்று திரம் உறச் சேர்ந்து` என மாற்றிக் கொள்க. நிரவுதல் - அது அதுவாய் வசப்பட்டு நிற்றல். `நீடும் சொரூபமாய்` என ஆக்கம் வருவிக்க. ``துரியத்து நின்றான்`` என்றதனஆல், `ஞானிகள் துரியத்தினின்றும் கீழ் இறங்கார்` என்க. துரியம் முதலிய அவத்தைகளின் இயல்பு முன் தந்திரத்தில் கூறப்பட்டது.
இதனால், `அடையத் தக்க பொருள் ஞான குரு உருவமே` என்பது கூறப்பட்டது.