ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்

பதிகங்கள்

Photo

மூவகைத் தெய்வத் தொருவன் முதல்உரு
ஆயது வேறாம் அதுபோல் அணுப்பரன்
சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற
ஏயும் நெறியென் றிறைநூல் இயம்புமே.

English Meaning:
Svarupa Siva is of the Triple Turiyas and Beyond

The three gods, Brahma, Vishnu, Rudra
Are of the Primal One;
Yet is He from them separate;
Like it, the Lord stands
In the Turiyas triple—
Jiva, Para and Siva
(One and yet separate.
Thus say the scriptures sacred.
Tamil Meaning:
`முக்குணங்களால், `அயன், அரி, அரன்` எனச் சொல்லப்படும் மூவருள், `தனி ஒருவன்` எனச் சுட்டப்படும் அரன், குணம் பற்றி ஏனையிருவரோடு ஒத்தவனாகச் சொல்லப்படினும் ஏனையிருவர்போலச் சகலனாகாது, பிரளயாகலருள் பக்குவம் உற்ற வனாய், சிவனை மறந்து, `தானே முதல்வன்` என மயங்கும் மயக்கம் இன்றிச் சிவனையே முதல்வனாகத் தெளிந்து அவன் பணியையே ஆற்றுபவன் ஆதலின் வேற்றியல்புடையனாதல் போல முத் துரியத்திலும் சீவனும், சிவனும் ஒரு பெற்றியராய் நின்ற போதிலும் பல வகையில் சிவன் சீவனின் வேறு பட்டவன்` என்று சிவநூல்கள் செப்பும்.
Special Remark:
முதல் உரு - காரணமூர்த்தி. தனது வலப்பாகத்தினின்று அயனையும், இடப்பாகத்தினின்று அரியையும் தோற்றுவித்தலால் அரன் காரண மூர்த்தியாயினன். இவனே சீகண்ட உருத்திரன். `முதல் உரு ஆயதனால்` என உருபு விரிக்க. அணு - உயிர். ``அணுப் பரன்,`` சேய - சேய்மையில் உள்ள. ``சிவம்`` என்பது, `சுத்தம்` என்னும் பொருளதாய் நின்றது. கேவல சகலங்களைக் கடந்து நிற்றலின் சுத்தாவத்தைகள் சேய வாயின. `முத்துரியம்` முன் தந்திரத்தில் சொல்லப்பட்டன. `ஒரு சீர் பெற ஏயும் நெறி` என்க. ஏய்தல் - பொருந்துதல்.
`அணுவும், பரனும் ஏயும் நெறி, மூவகைத் தெய்வத்து ஒருவன் வேறாயது` என இயைத்து முடிக்க. முதல் அடி இன எதுகை பெற்று வந்தது.
இதனால், `சொரூப உதயத்துச் சிவ சீவர்கள் அருள் நிலையால் சமமாயினும், பொருள் நிலையால் வேறானவர்களே` என்பது கூறப்பட்டது.