ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்

பதிகங்கள்

Photo

உருவன்றி யேநின் றுருவம் புணர்க்கும்
கருவன்றி யேநின்று தான்கரு வாகும்
மருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்
குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே.

English Meaning:
Unless Lord Himself Reveals as Guru, He is Beyond Reach

Form He has none,
Yet Form He assumes;
Birth He has none;
Yet is He the seed of all births;
Beyond Formlessness, too, He is,
The elusive Lord;
Unless Himself as Holy Guru reveals
None, Him reach.
Tamil Meaning:
சிவன் தான், தனக்கு ஓர் உடம்பில்லாமலே பல உயிர்கட்கும் பல்வேறு வகையான உடம்புகளைப் படைத்துக் கொடுக்கின்றான். தனக்கு ஒரு காரணம் இன்றித் தானே அனைத் திற்கும் காரணமாய் உள்ளான். எந்தப் பொருளின் தன்மையும் தன்னைப் பற்றாது தான் அனைத்துப் பொருளிலும் தாமரை இலையில் தண்ணீர் போலப் பொருந்தி நிற்கின்றான். ஆகவே, அவனது நிலை யாவராலும் அறிய ஒண்ணாத பெருமறையாய் இருத்தலின், அம்மறையை அறிந்த நல்லா சிரியன் வழியாக அன்றித் தாமே நேராக அவனை அடைதல் யாவர்க்கும் இயலாது.
Special Remark:
``கரு`` என்றது காரணத்தை. மருவுதல் பற்றுறப் பற்றல். மாயம், இங்கு மறைவைக் குறித்தது, அதனையுடைய தன்மையை உணர்த்திற்று.
``கருவினா லன்றியே கருவெலாம் ஆயவன்
உருவினா லன்றியே உருவுசெய்தான்`` (திருமுறை - 3.35.3.) என்னும் ஆளுடைய பிள்ளையார் அருள்மொழியை இம் மந்திரத்தோடு ஒப்பிட்டுக் காண்க.
இதனால், `உண்மைச் சொரூபமாம் சிவனது தோற்றத்திற்கு முற்பட்ட நிலை குருவினது தோற்றம்` என்பது கூறப்பட்டது.