ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து

பதிகங்கள்

Photo

பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத் தெல்லையின் ஈறே.

English Meaning:
Mystic Frontiers of our Universe

The Land of Mount Meru,
And the Land of South that lies beyond it
Are the Ida, Pingala;
The Holy Hall where the Lord of Crescent Moon dances,
Is the Sushumna
—Thus lie the fronitiers of this universe vast.
Tamil Meaning:
[முன் மந்திரத்தில் பிண்டம் அண்டத்தோடு ஒப்ப வைத்து நோக்கும் முறை கூறியது போல, அண்டத்தைப் பிண்டத்தோடு ஒப்ப வைத்து நோக்கினால்,]
மேருவிற்கு அப்பால் உள்ள நில உருண்டையின் வடமுனை நிலமகட்குப் பிங்கலை நாடியும், தெற்கேயுள்ள இலங்கை இடைநாடியும், சிவன் நடனம் புரிகின்ற தலங்களுள் தலையாயதாகிய தில்லை நடுநாடியும் ஆகும். பூதகாரியமாகிய அண்டம், பிண்டம் இரண்டனுள் அண்டம் பிண்டத்தோடு ஒப்ப இவ்வாறு வரையறை செய்து உணரப்படும்.
Special Remark:
`அண்டம், பிண்டம் என்பவற்றுள் பிண்டத்தை அண்டத்தோடு ஒப்பித்தலே மரபு போலும்` என மலையாமைப் பொருட்டு, `அண்டத்தைப் பிண்டத்தோடு ஒப்பித்தலும் மரபே` என்றற்கு இது கூறினார். இதனால், அண்டம் பிண்டம் இரண்டும் தம்முட் சமம் ஆதல் விளங்கிற்று. கோயிற் புராணத்திலும்,
``அலைந்திடும் பிண்டம், அண்டம்
அவைசமம் ஆத லாலே,
இலங்கைநேர் இடைபோம்; மற்றை
இலங்குபின் கலையாம் நாடி
நலங்கிளர் இமய நேர்போம்;
நடுவுபோம் சுழுனை நாடி``
என்றும்,
``நாடரு நடுவின் நாடி
நலங்கிளர் தில்லை நேர்போய்க்
கூடும்``*
என்றும் இவ்வாறே கூறப்பட்டது.
`புறத்து ஆனது` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று. ``இடை பிங்கலை`` என்பவற்றை முன் மந்திரத்திற்கு இணங்க, `புறத்து ஆனது, தெக்கணம்` என்பவற்றோடு எதிர்நிரல் நிறையாக இயைக்க. ``தெக்கணம்`` என்றது. தென் கோடியாகிய இலங்கையை, `நட்டம் பயில்` எனப் பயிலுதலுக்குச் செயப்படுபொருள் வருவித்துக் கொள்க. நில உருண்டைதான் பல பகுதிகளை உடைத்தாயினும், அவற்றுட் சிறந்தது, `சுரும பூமி` எனப்படுகின்ற பரத கண்டமே இவ்வாறான பல சிறப்புக்களை உடையது என்க.
இதனால், பிண்டத்தைப் போல அண்டமும் நாடி முதலியவற்றை உடைத்தாதல் கூறப்பட்டது.
`அண்டம், பிண்டம் இரண்டும் சிவன் நடம்புரியும் பொற்பதிகளை உடையன` என்றற்கு இவ்விரு மந்திரங்களும் இவ்வதிகரத்தில் அருளிச்செய்யப்பட்டன.