ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து

பதிகங்கள்

Photo

உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனை
செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனை
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்புறு நாடிஎன் அன்பில்வைத் தேனே.

English Meaning:
In Golden Hall He Dances in Intimacy of Jiva

In High Heaven He dances;
In Excellence He dances;
In the Red-Gold Hall
The Valiant Sentinel dances,
In the intimacy of Jiva He dances;
As Tat-Para He dances;
Him I sought in rapture divine
And in love adored.
Tamil Meaning:
நான், பிறவியாகிய துன்பத்தினின்று நீங்கி, வீடாகிய இன்பத்தை அடைதற்குரிய வழி யாது` என்று ஆராய்ந்து கூத்தப் பெருமானை என்னுடைய அன்பிற்குள் அகப்படும்படி வைத்தேன். தேவருள் அஅவனே கூத்தாட வல்ல பெருமான். அவனது கூத்து எல்லார் கூத்தினும் மேலாய கூத்து; செம்பொன் அம்பலத்தில் வெற்றியுடன் விளங்குதல் கூத்து; அனைத்துப் பொருள்காவல் இயகத்தோடு மிக நெருக்கமான தொடர்புடைய கூத்து. உபநிடதங்கள், `தத்` என்னும் சொல்லால் சுட்டுகின்ற பரம் பொருளின் கூத்து.
Special Remark:
ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. ``கூத்தன்`` என வந்தன பலவும் ஒருபொருள்மேல் வந்த பல பெயர். கூத்தின் சிறப்பை அதனை உடையானோடு பலவகையில் சேர்த்துக் கூறினார்.
``கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்``8
என்பதனால், காளியோடு ஆடி, `அவளை வென்ற அந்த நடனமே தில்லையில் செய்யப்படுகின்றது` என ஆளுடைய அடிகள் அருளிச் செய்தவாறே இவரும் பொன்மன்றுட் கூத்தினைச் ``சேவகக்கூத்து`` என்றார். சேவகம் - வீரம், வெற்றி. கோயிற் புராணமும் இவ்வாறே கூறுதல் காண்க.
``சம்பந்தம்`` என்றது, இங்கு அத்துவித சம்பந்தத்தை. அதனைச் சித்தாந்த நூல்கள் இனிது விளக்கும்.
``நாடி வைத்தேன்`` என்றதனால், அதன் பயன் எண்ணியது எண்ணியவாறே கிடைத்தமை பெறப்பட்டது. அதனை இங்குக் கூறியதனால், `நீவிரும் அதனை அவ்வாறு வைத்தால் இன்புறுவீர்கள்` என்பது குறிப்பெச்சமாயிற்று.
``சித்தமும் செல்லாச் சேட்சியன காண்க!
பத்தி வலையில் படுவோன் காண்க!``J
``ஆர்காண வல்லார் அரனவனை? அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோர் மறைத்து``l
``அழலார் வண்ணத்து அம்மானை
அன்பில் அணைத்து வைத்தேனே``3
எனப் பிற திருமுறைகளிலும் வந்தவாறு இங்கும் நாயனார், ``அன்பில் வைத்தேன்`` என்று அருளிச்செய்தார். அதனால், வேதங்களாலும் அறியவாராது `அது` எனச் சேய்மைச் சுட்டாகப் பொதுவிலே சுட்டப் படுகின்ற பரம்பொருள் அன்பர்தம் அன்பிற்குள்ளே வந்து அகப் படுதல் தெளிவாகும். பொற்பதிப் கூத்துப் பல வகைக் கூத்தும் ஆதல் தோன்றுதற்கு. இடையே ``சொம்பொன் திருமன்றுட் கூத்து`` என்றார்.
இதனால், பொற்பதிக் கூத்தின் தரிசனம் பலவகைக் கூத்தின் தரிசனமுமாய் வீடு பயத்தல் கூறப்பட்டது.