ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து

பதிகங்கள்

Photo

தெற்கு வடக்குக் கிழக்குமேற் குச்சியில்
அற்புத மானஓர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.

English Meaning:
The Uncreated Being Dances1

In south, north, east, west and crest
In the five faces2 wondrous therein,
In the space within space of peerless Bliss,
The Tat-Para dances the dance rare.
Tamil Meaning:
சிவன் `உருவம்; அருவுருவம்` என்னும் இருவகை வடிவில் தலங்களில் எழுந்தருளியிருக்குங்கால் எங்கும் கிழக்கு நோக்கியே எழுந்தருளியிருப்பான். கோயில் வாயில் எத்திசையை நோக்கியிருப்பினும் அது கிழக்குத் திசையாகவே பாவிக்கப்படும். அந்நிலையில் உச்சி, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்னும் ஐந்து பக்கங்களிலும் முறையே ஈசானம், தற்புருடம், அகோரம் வாமதேவம் சத்தியோசாதம் முகங்கள் உள்ளனவாம். கோயிலின் வாயில் திசை மாறியிருப்பின் தற்புருட முகம் அந்தத் திசையில் வர அந்தத் திசையின் முகம் தற்புருட முகத்தில் சென்றுவிடும். சிவனது இந்த முகங்கள் ஏனை யோரது முகங்கட்கு இல்லாத பல அதிசய ஆற்றல்களை உடையன. அந்த முகங்களின் ஆற்றலால் சிவன் உயிர்களை நிகரற்ற பேரின்ப நிலையில் செலுத்துதற்கு மேற்கூறிய இருவகைத் திருமேனிகளிலும் இருந்து ஒப்பற்ற திருக்கூத்துக்களைச் செய்கின்றான்.
Special Remark:
செய்யுள் நோக்கி உச்சி, கிழக்கு முதலிய பக்கங்கள் முன் பின்னாகக் கூறப்பட்டன. இந்த ஐந்து முகங்களும் முன் தந்திரத்தில், ``நடுவு கிழக்குத் தெற்குத் தரம்மேற்கு`` என்பது முதலிய மந்திரங்களிலும் கூறப்பட்டமை காண்க. இங்குக் கூறிய குறிப்புக்களால் சிவனது, `ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியேசாதம்` என்னும் முகங்கள் ஐந்தும் சிவனது `உச்சி, முன்பக்கம், வலத்தோள், இடத்தோள், முதுகு` என்பவற்றின்மேல் உளவாகச் சிவன் எங்கும் கிழக்கு நோக்கியே அமர்ந்திருப்பவனாதல் விளங்கும்.
பக்கங்கள் பலவற்றிலும் முன்பக்கமே கொள்ளத்தக்கது ஆதலின், வழிபாடுகள் பலவும் தற்புருட முகத்திலே செய்யப் படுகின்றன. `தற்புருட முகத்தில் செய்யப்படுவது எதுவும் எல்லா முகத்திலும் செய்ததேயாம்` என்பது சிவாகமங்களில் சொல்லப்படுவது.
ஐந்து முகங்களும் ஐந்து சாதாக்கியங்களாகச் சொல்லப்படும். சத்தியோசாதம் அமூர்த்தி சாதாக்கியம், வாமதேவம் மூர்த்தி சாதாக்கியம். அகோரம் கர்த்திரு சாதாக்கியம். தற்புருடம் கரும சாதாக்கியம் முதலாக ஒவ்வொன்றும் அடுத்த சாதாக்கியத்தை முறையே சார்ந்து நிற்க, முடிவில் நான்கு சாதாக்கியமும் சிவ சாதாக்கியத்தைச் சார்ந்து நிற்கும் என்க.
1. `உச்சிமுகம் ஈசானம்; ஒளிதெளிஅப் பளிங்கே;
உத்தரபூ ருவத்திசையை நோக்கிஉறும் உகந்தே.
2. நிச்சயித்த முகத்தின்கீழ்ப் பூர்வதிசை நோக்கி
நிகழும்முகம் தற்புருடம்; கோங்கலர்போல் நிறமே.
3. அச்சுறுத்தும் அகோரமுகம் அறக்கரிது; கராளம்
அவிழ்தாடி; வலத்தோளில் தென்னோக்கி அமரும்.
4. செச்சைநிறத் தெரிவைமுகம்; இடத்தோள்மேல் வாமம்.
5. சிறுபுறத்தின் முகம் சத்தி யோசாதம் நிகழ்வால்.
என்னும் சிவதருமோத்தரச் செய்யுளாள் மேற்கூறியவை விளங்குதல் காண்க. உத்தர பூருவம் - வட கிழக்கு. பூர்வதிசை கிழக்குத் திசை. அறக் கரிது - மிகவும் கறுப்பானது.
அகோரமுகம் தோற்றத்தால் அச்சுறுத்தும் கோர வடிவாய் இருப்பினும் அது கோரத்திற்குக் கோரமாய்க்கொடிய வினைகளை அழித்தொழித்தலால் உண்மையில் அகோரமே - கோரம் இல்லாத - சாந்தமே. ``கொன்றது வினையைக் கொன்று நின்றஅக் குணம்என் றோரார்`9 என்னும் சிவஞான சித்தியை நோக்குக. இதனானே அகோர மந்திரம் பிராயச்சித்த மந்திரமாய் உள்ளது. ``ஒப்பில் பேரின்பத்து`` என்பதனை, ``தனி நடம் செய்யும்`` என்பதற்கு முன்னே கூட்டி யுரைக்க. பேரின்பத்து நடம், பேரின்பத்துக்கு ஏதுவாய நடம். ``உபயம்`` இரண்டில் முன்னது, `இரண்டாவதான உருவம்` என்றும், பின்னது, `அருவம், இருவம் இரண்டுமான அருவுருவம்` என்றும் பொருள் பயந்தன. மூன்றாம் அடி இனவெதுகை.
இதனால், ஐந்து முக மூர்த்தியாகிய சதாசிவ மூர்த்தியே நிலவுலகத் தலங்களில் உருவத் திருமேனி கொண்டு நடம் செய்தல் கூறப்பட்டது.
சிவாலயங்களில் கருவறையில் உள்ள இலிங்கம் சதாசிவ மூர்த்தமே. ஏனை உருவத் திருமேனிகள் மகேசுர மூர்த்தங்களாம்.