ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து

பதிகங்கள்

Photo

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும்இவ் வானின் இலங்கை குறிஉறும்
சாரும் திலைவனம் தண்மா மலயத்தூ
டேறும் சுழுமுனை இவைசிவ பூமியே.

English Meaning:
Siva`s Spheres of Dance Within

The central spinal column that is Meru
The Nadis, Ida (Left) and Pingala (Right),
The Jiva`s delta-shaped Muladhara
The Sushumna Cavity that is like Tillai Forest
Where the cool (southerly) breeze from Mount Malaya wafts
All these alike are Siva`s Spheres of Dance.
Tamil Meaning:
(`சிவன் அண்டம், பிண்டம்` இரண்டிலும் நடம் புரிகின்றான்` என்பதனாலும், `பிண்டத்துள் இருதயத்திலே நடம் புரிகின்றான்` என்பதனாலும் அண்டமும், பிண்டமும் சமம் ஆகின்றன. அம்முறையில் நோக்கும் பொழுது) பிண்டத்தில் நடு நாடியாகிய சுழுமுனா நாடியே மேரு மலையும், இடைநாடியே இலங்கையும், பிங்கலை நாடியே மேருவிற்கு அப்பால் உள்ள நில உருண்டையின் வடமுனையும் ஆகும். `இனி, `மேரு` எனப்படும் நடுநாடி மேல் நோக்கிச் செல்கின்ற மணிபூரகம் பொதிய மலையும். இருதயம் தில்லைவனமும் ஆகும். ஆகவே மேரு முதலியவற்றை உடைய நிலம் சிவனது திருவருள் மிக்கு விளங்குகின்ற சிவநிலம் ஆதல்போல், சுழுமுனை முதலியவற்றை உடைய பிண்டமும் சிவநிலமேயாம்.
Special Remark:
`நடு நாடி மேரு வாய் உறும்; இடை இலங்கையாய் உறும், பிங்கலை குறியாய் உறும்; மலயத்தூடு ஏறும் சுழுனை தில்லை வனத்துச் சாரும் ஆகவே, இவைகளையுடைய பிண்டம் வெளியே இனிது விளங்குகின்ற நிலம் போல சிவபூமி என இயைத்துக் கொள்க.
குறி - எல்லை. அது வட எல்லையைக் குறித்தது. முன்னர்க் கூறிய உருவக முறையால், ``மலயம், தில்லைவனம்`` என்பன மணி பூரகத்தையும் இருதயத்தையும் குறிப்பவாயின. ``வான்`` என்றது அதன்கண் அடங்கி விளங்கும் நிலத்தை. இன், உவம உருபு. `இலங்கை, குறி` என்பவற்றை, இடைபிங்கலைகளோடு நிரல் நிறையாக இயைக்க. `ஆய் உறும்` என ஆக்கம் விரித்து எல்லா வற்றோடும் கூட்டுக. `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று. ``இவை`` என்பது தானியாகு பெயராய் இவைகளையுடைய உடம்பைக் குறித்தது.
இதனால், அண்டத்தில் பொற்பதிகள் இருத்தல் போலப் பிண்டத்திலும் பொற்பதிகள் இருத்தல் கூறப்பட்டது.