ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து

பதிகங்கள்

Photo

மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுட் புரிசடைக் கூத்தனைச்
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை யாரறி வாரே.

English Meaning:
Siva-Bliss Dance Beyond Description

He dances as a Red Ruby within,
He dances in the flourishing Tillai;
He dances in the Jewelled Hall,
He dances with matted locks;
He dances in the distant Light Divine;
He dances in Sivananda Bliss;
He dances the Pure Gold dance;
Who shall describe Him indeed that thus dances.
Tamil Meaning:
சிவன் தனது கூத்தினை மாணிக்கச் சபையில் மாணிக்கக் கூத்தாக இயற்றுவான். தில்லை பொற்சபையில் பொற் கூத்தாக இயற்றுவான். மற்றும் வெள்ளி முதலிய சபைகளில் அது அதற்குத் தக்க கூத்தாக இயற்றுவான். அனைத்தையும் கடந்த தனது இயற்கைப் பரஞ்சோதி வெளியில் சிவானந்தக் கூத்தாக இயற்றுவான். (அது முதலிலே சொல்லப்பட்டது.) ஆகவே, ஒருவகையாய் இல்லாமல் பலவேறு வகையாக இயற்றுகின்ற ஆணிப்பொற் கூத்தனது கூத்து வகைகளையெல்லாம் யார் வரையறை செய்து கூறவல்லவர்!.
Special Remark:
`ஒருவரும் இல்லை` என்பதாம். பூணுதல் - வெள்ளி முதலியவற்றைத் தாமதமாகக் கொள்ளும். ``சடைக் கூத்து`` என்பதைச் `சடைபோலும் கூத்து` என உவமத் தொகையாக்கி, `சிவனது சடை ஒன்றாய் இல்லாது பலவாய் விரிதல் போலப் பலவாய் விரியும் கூத்து` எனத் தொழிலுமாம் ஆக்குக. ஆணிப்பொன் - பிற பொன்னின் மாற்றுக்களையெல்லாம் அளந்து காட்டித் தான் வேறொன்றால் அளக்கப்படாத பொன். இதனை `உரையாணி` என்பர். ஆணிப்பொன் போலும் கூத்து, பிற கூத்தின் தகுதிகளைத் தான் அளந்து, பிறிதொரு கூத்தினால் தன் தன்மை அளக்கப்படாத கூத்து.
``யார் அறிவாரே`` என்றது, `பொற்பதிகளில் சென்று காணின் அக்கூத்துக்களின் வகையை ஒருவாறு உணர்ந்துரைத்தல் கூடும்` என்றபடி.
இதனால், பொற்பதிக் கூத்து அவனது கூத்து வகை பலவற்றையும் காட்டுதல் கூறப்பட்டது.