ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 43. சோதனை

பதிகங்கள்

Photo

ஆதிப் பிரான்தந்த வாள்அங்கைக் கொண்டபின்
வேதித்திங் கென்னை விலக்கவல் லார்இல்லை
சோதிப்பன் அங்கே சுவடும் படாவண்ணம்
ஆதிக்கண் தெய்வம் அவன்இவன் ஆமே.

English Meaning:
Be not Separated from Lord

Holding the Sword of Jnana
That Primal Lord gifted me,
None there is to separate me (from Him);
Search did I there further
Leaving traces none;
Then Jiva with Primal Siva one became.
Tamil Meaning:
யான் தொடக்கத்தில் தேவனாய் இருந்து, இப்பொழுது சிவனே ஆகிவிட்டேன். அஃது முழுமுதற் கடவுளாகிய சிவன் தனது ஞானமாகிய வாளை எனக்கு ஈந்தருள, இதனை யான் விடாது பற்றிக்கொண்டமையால். என்னை இனி அவனை அடைய ஒட்டாமல் வேறுபடுத்தி விலக்க வல்லவர் எங்கும், எவரும் இல்லை. அவ்வா றன்றி எங்கேனும், யாரேனும் என்னை வேறுபடுத்தி விலக்க வருவார்களேயாயின் அவர்கள் வந்து சென்ற சுவடும் தோன்றாதபடி அவர்களது வலிமையைச் சோதித்து ஓட்டிவிடுவேன்.
Special Remark:
``நாம் ஆர்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்``, `தென்றிசைக்கோன்றானே வந்து - கோவாடிக் குற்றேவல் செய் கென்றாலும் குணமாகக் கொள்ளோம்`* ``யாம் ஆர்க்கும் குடியல்லோம்; யாதும் அஞ்சோம்`` எனப் போந்த திட்பத் திரு மொழிகளைக் காண்க. வேதித்தல் - பேதித்தல். ``வேதித்து`` என்னும் குற்றியலுகரம் கெடாது நின்றது. அங்கே - அப்பொழுதே. தெய்வம் ஆதல், மக்களினும் மேம்படுதல். அது ஞானத்தைக் கேள்வியளவில் உணர்ந்த நிலை. சிவமாதல் நிட்டை கூடியபின். வீரன் ஒருவன் தன்னையே சுட்டி, `இவன்முன்யாரும், எதுவும் செய்ய இயலாது` என்றவிடத்து, வீரம் காரணமாகப் படர்க்கைச் சொல் தன்மைப் பொருள் தருதல் போலவே, இங்கு `இவன்` என்பது தன்மைப் பொருள் தந்தது. இவன் ஆதிக்கண் தெய்வம், இப்போது `அவனே` என மாற்றி, முதலிற் கூட்டியுரைக்க.
இதனால், சோதனைகளில் ஞானிகளது துணிவு நிலை உணர்த்தப்பட்டது.