ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 43. சோதனை

பதிகங்கள்

Photo

எறிவது ஞானத்(து) உறைவாள் உருவி
அறிவத னோடே அவ் ஆண்டகை யானைச்
செறிவது தேவர்க்கும் தேவர் பிரானைப்
பறிவது பல்கணம் பற்றுவிட் டாரே.

English Meaning:
Unsheath the Sword of Jnana

Unsheath the Sword of Jnana and smite;
That instant you shall know Lord;
Unite in Him,
Who the Lord of Celestials is;
Away then shall you be
From the rabble numerous
That to desire cling.
Tamil Meaning:
உலகப் பற்றை விடுத்துச் சிவப்பற்றைப் பற்றினோர், அந்நிலைக்கண் தமக்கு யாதேனும் இடையூறுவரின் அவர்கள் அவற்றைப் போழ்வது, ஞானமாகிய வாளைத் திரு வருளாகிய உறையினின்றும் உருவியாம். அங்ஙனம் இடையூற்றைப் போக்கி முன்போல அவர்கள் அறிந்து நிற்பது, தம் இயல்பையும், தலைவன் இயல்பையுமாம். (ஆகவே அடிமை நிலையினின்றும் பிறழார் என்பதாம்) அங்ஙனம் அறிந்து அடிமை செய்து நிற்றலால் அவர்கள் இரண்டறக் கலப்பது சிவபெருமானையே. அவர்கள் அறவே விட்டு விலகுவது, வேற்றியல்புடைய பல குழுக்களையாம்.
Special Remark:
``ஞான வாள் ஏந்தும்; ... வான ஊர் கொள்வோம் நாம் மாயப்படை வாராமே``* என்று அருளிச்செய்தது காண்க. ``ஞானத்து`` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை. ஞானிகட்கு இடை யூறுகளாவன, ஐம்புலக் குறும்புகள். அறிவ, அன் பெறாத அகர ஈற்று அஃறிணைப் பன்மை வினைப்பெயர். அஃது அறிதலாகிய அத்தொழில்மேல் நின்றது. `தன்னோடு` என்பது இடைக்குறைந்து, பன்மை யொருமை மயக்கமாய் வந்தது. தேவர்க்கும் தேவர், மூவர். `எறிவது, செறிவது, பறிவது` என்பனவும் தொழில்மேல் நின்றனவே. `பற்றுவிடார்` என்பது பாடம் அன்று.
இதனால், சோதனைக் காலத்திலும் ஞானிகள் செய்யும் செயல்கள் கூறப்பட்டன.