ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 43. சோதனை

பதிகங்கள்

Photo

பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்(து)
அம்மான் அடிதந்(து) அருட்கடல் ஆடினோம்
எம்மாய மும்விடுத்(து) எம்மைக் கரந்திட்டுச்
சும்மா திருந்திடம் சோதனை ஆகுமே.

English Meaning:
Divine Experiment

The Mighty Lord, the Great Nandi,
Granted me His Feet of indescribable Bliss;
And in Ocean of Grace immersed me;
Freeing me from illusions all,
And secretly guarding me in safety,
He bore me to the holy banks of Silence
That indeed was an Experiment Divine.
Tamil Meaning:
எல்லோரினும் பெரியவனும், பெருந்தலைவனும் சொல்ல வாராத பெரிய இன்பத்தைத் தன்னை அடைந்தவர்க்கு வழங்கி யருளும் அன்னதொரு பெருந்தகையை உடையவனும் ஆகிய சிவன் உம்முன் வந்து தனது திருவடிகளை எங்கள் தலைமேற் சூட்டினமையால் நாங்கள் அவனது திருவருளாகிய கடலில் மூழ்கினோம் அதனால், (நீருள் இருக்கும் மீனைச் சிச்சிலி கொத்தமாட்டாது ஓடி விடுதல்போல) பொய்யாகிய பாசங்கள் எல்லாம் எம்மைப் பற்றமாட்டாது நீங்கிவிட, நாங்கள் எங்களை அவனிடத்தில் ஒளித்து வைத்துச் சும்மா இருக்கின்றோம். இந்த நிலையில் எங்கட்குச் சோதனைகள் வருகின்றன.
Special Remark:
அஃதாவது, `பாசங்கள் எங்களுடைய சோர்வை, மீன் நீரை விட்டு மேலே வரும் வரவைப் பார்க்கின்ற சிச்சிலி போலப் பார்க்கின்றன` என்பதாம். ஆகவே, `அப்பார்வை யினின்றும் நாங்கள் தப்புகின்றோம்` என்பது கருத்து. `பெம்மான் அம்மான்` என்னும் பொதுச் சொற்கள் சிவனையே குறித்தற்கு ``நந்தி`` என்னும் சிறப்புப் பெயரை இடையே பெய்தார். ``தந்து, விடுத்து`` என்பவற்றிற்கு `தந்தமையால், விடுத்தமையால்` என உரைக்க. `சும்மாதிருத்தல், வாளாதிருத்தல்` என்பனவே இலக்கணச் சொற்கள். அவை, `சும்மா, வாளா` என மருவி வழங்குகின்றன. `இருந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ஆகும் - தோன்றும்.
இதனால், முத்தி நிலையை அடைந்தவற்றை யெல்லாம் வகுத்துக் கூறி, இவற்றிற்குப் பின் சோதனை உளவாதல் கூறப்பட்டது.