ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம

பதிகங்கள்

Photo

வினையால் அசத்து விளைவ துணரார்
வினைஞானந் தன்னிலே விடாதுந் தேரார்
வினைவீட வீடென்னும் பேதமும் ஓதார்
வினையாளர் மிக்க விளைவறி யாரே.

English Meaning:
Renounce Karma and Be Liberated

They know not evil fruits
Karma brings,
They choose not to find Jnana
For liberation from Karma;
``Renounce Karma and be liberated``
—This Vedic teaching they know not;
They who wallow in Karma
Will never the Rich Harvest reap.
Tamil Meaning:
`நிலையில்லனவாகிய பல வகை உடம்புகள் ஒன்றழிந்தபின் மற்றொன்று தோன்ற, அஃதழிந்தபின் வேறொன்று தோன்ற, இவ்வாறு முடிவின்றி வந்து உயிரை அலைக் கழிப்பது வினையே` என்பதையும், `அந்த வினை பொருள்களை உற்றவா றுணரும் மெய்யுணர்வால் கெடும்` என்பதையும் ஆசான் அருள் பெறாதார் அறியமாட்டார். இனி, `வினை நீக்கமே வீடுபேறாம்` எனக் கூறுகின்ற வேதத்தையும் அவர்கள் ஓதுவதில்லை ஆகவே, அவர்கள் வினையை ஆண்டு, அதிற்றானே மகிழ்கின்றவராவர். அவர் பின்னும் பின்னும் எல்லையின்றி வரும் துன்பவினை அறிய மாட்டார்.
Special Remark:
அசத்து - நிலையில்லாதது. சத்து - நிலையுடையது இங்கு ``வினை`` என்றது பிராரத்த வினை, ஆகாமிய வினைகளை. `அவை ஆசிரியன் உணர்த்தியவாற்றானே நின்மலாவத்தையை அடைந்து அதன்கண் நிற்பவரை வாதியா` என்பதை,
``எத்தனுவில் நின்றும் இறைபணியார்க் கில்லைவினை;
முற்செய்வினை யும்தருவான் முன்``
என்றும் சிவான போதத்தால்3
``எப்பொழுது இவனுடைய இருதயத்தில்
நிறைந்துள்ள ஆசைகள் எல்லாம் ஒழிகின்றனவோ
அப்பொழுது, சாகும் தன்மையுடைய மனிதன்
சாகாதவனாகி விடுகின்றான்``
என்று கடோப நிடத ஆறாவது வல்லிப் பதினாறாவது மந்திரம் கூறுகின்றது. ஆசையால் விளைவனவே வினையாதலின் ``வினைவீட வீடு`` என வேதம் கூறுதல் அறிக.
``அவாஎன்ப எல்லா உயிர்க்கும், எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து``8
``இன்பம் இடையறாது ஈண்டும், அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்``8
எனத் திருவள்ளுவர் வலியுறுத்தியதும் இதையே.
இதனால், `வினைமாசு நீங்கலே உண்மைத்தூய்மை, அது நீங்காமையே உண்மை மாசு` என்பன கூறி முடிக்கப்பட்டது. (யாவரும் அறிந்தது இதுவேயாதல் பற்றி இவ்வாறு கூறினார், `பின்பு ஆழ்ந்து உணர்வார்க்குக் காரணமாசாக ஆணவத்துண்மை புலனாகும்` என்பது கருதி.)