ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம

பதிகங்கள்

Photo

பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை
அருளது போற்றும் அடியவ ரன்றிச்
சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்
மருளவர் சிந்தை மயங்குகின் றாரே.

English Meaning:
Adore Lord and Receive Grace

The Quintessence of Truth is my Holy Father
Only they who adore Him
Are in His Grace accepted;
The rest,
Caught in whirl of misery,
In dark stupor lie.
Tamil Meaning:
மெய்ப் பொருளாய், என்றும் ஒரு பெற்றியனாய் நிற்பவன் சிவபெருமானே. அவனே எங்கட்குத் தந்தை. அவனது திருவருளைப் போற்றுகின்ற அடியவர்களே சுருண்டு சுருண்டு வருகின்ற கடலின் அலைபோல முடிவின்றி வருகின்ற பிறப்பாகிய துன்பச்சூழலினின்றும் நீங்குவர். அவனது திருவருளைப் போற்றாது ஒழிகின்றவர் எல்லாம் அச்சூழலில் அகப்பட்டுத் திகைக்கின்றார் ஆதலின் அவர் அருளுடையாராகாது மருளுடையவரேயாவர்.
Special Remark:
எனவே, `திருவருட் செல்வராகிய சிவனடியாரே தூயவர் ; அச்செல்வத்தைப் பெறாதோரெல்லாம் மாசுடையவரே; அதனால் அச்செல்வத்தைப்பெற முயலுங்கள்` என்பது குறிப்பெச்சம்.
``புண்ணியன்`` என்பது, `சிவன்` என்னும் பொருட்டாய் நின்றது. `அது` மூன்றும் பகுதிப்பொருள் விகுதி. ``சுருளதுவாய்`` என்பதில் ஆக்கம் உருவகம் குறித்து நின்றது. ``மருளவர்`` என்பதை இறுதியிற் கூட்டுக.
இதனால், உண்மைத் தூய்மையை உணராதவரது நிலைமை இரங்கத் தக்கதாதல் கூறப்பட்டது.