ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம

பதிகங்கள்

Photo

நாசி நுனியினின் நான்மூ விரலிடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை அம்மறை
கூசி யிருக்கும் குணம் அது வாமே.

English Meaning:
Mystery of Lord`s Abode

At the tip of nose (Ajna Centre)
Is the breath, twelve finger-breadth long,
That Lord`s abode is;
None knows this;
The Vedas that in expansiveness truths expound,
Of this was hesitant to speak;
Such indeed is Lord`s greatness.
Tamil Meaning:
மூன்றாம் தந்திரத்தில், நாசிக்கதோமுகம் பன்னிரண்டங்குலம்``8 என்னும் மந்திரத்திற் கூறியபடி, `மூக்கின் நுனிக்குக் கீழே பன்னிரண்டங்குலத்தில் உள்ள இருதயம் சிவன் எழுந்தருளியிருக்கும் இடம்` என்பதை உங்களுள் ஒருவரும் அறியார். (அதனால் அவர்கள் புறத்தே உள்ள இடங்களில் சிவனைக் காணும் அளவிலே அமைந்து, அதனையே சிவக்காட்சியாகக் கொண்டு இருந்துவிடுகின்றனர்.) ஆயினும் பெரிய மறைநூல்கள் மேற்கூறிய ஈசன் இருப்பிடத்தைச் சொல்லியிருக்கின்றன. எனினும் அந்த மறை நூல் அந்த இடத்தை அணுக இயலாதவர்கட்கு அதனைக் கூற நாணம் உற்று, வெளிப்படையாக அன்றிக் குறிப்பாகவே கூறியமைந்தன. அது மறைநூல்கட்கு இயல்பு.
Special Remark:
`அதனால், அப்பொருளை நல்லாசிரியரை வழிபட்டுக் கேட்டுணர்ந்து அணுகல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். இங்கு, ``பெருமறை`` என்றது, யோகம், தகர வித்தை முதலியவற்றைக் கூறும் உபநிடதங்களையும், சிவாகமங்களில் யோக பாதங்களையும். அவ்விடங்களில் குறிப்பு மொழிகள் உளவாதலை அறிக. நாயனாரும் `சூனிய சம்பாடணை` முதலியவற்றால் குறிப்பு மொழிகள் பல வற்றைக் கூறினமை வெளிப்படை.
இதனால், `புறத்தூய்மையோடு அமைந்துவிடாது அகத் தூய்மையை அடைதல் வேண்டும்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது புறத்தூய்மையையே சிறப்பாக வலியுறுத்துவன பிரம்மாணங்களும், மிருதிகளும்.