ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம

பதிகங்கள்

Photo

ஆசூசம் இல்லை அருநிய மத்தருக்(கு)
ஆசூசம் இல்லை அரனைஅற் சிப்பவர்க்(கு)
ஆசூசம் இல்லையாம் அங்கி வளர்ப்போருக்(கு)
ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே.

English Meaning:
Muladhara is not Unclean

Uncleanness none is for those
Who ritual discipline observe;
Uncleanness none is for those
Who Hara worship;
Uncleanness none is for those
Who the sacred Fire tend;
Uncleanness none is for those
Who in Vedic Jnana versed are.
Tamil Meaning:
சிவனது முதன்மையை உணர்ந்து அவனைச் `சரியை, கிரியை, யோகம், ஞானம்` என்னும் நால்நெறியில் எவ்வகையில் நின்று வழிபடுவார்க்கும் புறத்தூய்மை வாயாவிடினும் அகம் திருவருளில் படிந்திருத்தலால் அவர்கட்கு எந்த வகையான அசுசியும் இல்லையாம்.
Special Remark:
இஃது அறியாது அவர் புறத் தூய்மை குறைந் திருத்தல் பற்றி அவரை, `ஆசௌசம் உடையவர்` என இகழலாகாது என்பதாம். புறத் தூய்மை இல்லாமைக்குக் காரணம் அவர் அதனை இகழ்ந்து ஒதுக்குதல் அன்று; வாய்ப்புக் கூடாமையேயாம். கண்ணப்பர் முதலியோரது அருள் வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.
அரு நியமம் - கடைப்பிடித்தற்கரிய கடப்பாடான தொண்டு அருச்சனை அகத்தும், புறத்தும் செய்யும் வழிபாடு. யோகிகள் பிராணா யாமத்தால் மூலாக்கினியை வளர்ப்பர் ஆதலால், புறத்தே அழல் ஓம்பி வழிபடுவாரும் யோகிகளாகச் சொல்லப்படுவர். இவருள் சிவவேள்வி செய்வாரையே இங்குக் கொள்க. ஞானசம்பந்தர்,
``சுடர்விட்டுளன் எங்கள் சோதி``*
என அருளிச்செய்தற்குச் சேக்கிழார்,
``ஆன்ற அங்கிப் புறத்தொளியாய், அன்பின்
ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்``*
எனப் பொருள் விரித்தமை இங்கு நோக்கத் தக்கது.
அருமறை ஞானிகளாவார் வேதத்தின் `பிரமகாண்டம்` எனப்படும் ஞானகாண்டப் பொருளை அதன் தெளிவாகிய சிவாகமங்களின் ஞானபாதத்தின் வழிச் சிந்திப்பவர்களும், சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடியிருப்பவர்களும் ஆவர். இவற்றிற்கெல்லாம் முற்பட்டது. ``குருவார்த்தை கேட்டல்``* ``அருமறை`` என்பதனை இரட்டுற மொழிந்து, `அரிய உபதேசம்` என்றும், `அரிய பிரகாண்டம்` என்றும் இருபொருள் கொள்க.
இதனால், `சிவநெறி நிற்றலே சிறப்புடைத் தூய்மை என்பது கூறப்பட்டது.