ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை

பதிகங்கள்

Photo

வீட்கும் பதி பசு வைப்பாசம் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்கவற் றால்உணத்
தாட்கும் நரக சுவர்க்கத்தில் தான்இட்டு
நாட்குற நான்றங்கு நற்பாசம் நண்ணுமே.

English Meaning:
Creation of Experiences for Jiva


The Pasu-Pasam thus released,
When it overcomes Jiva
Pati works out his redemption;
And receives him into His Grace,
Having made him experience Karmas two,
He consigns him into hell and heaven;
And as days pass,
Jiva acquires love of God—(Pati-Pasam)
In which am I steeped.
Tamil Meaning:
பதி, பசுவை இயல்பாகவே உள்ள ஒரு பாசத்தின்மேல் மற்றொரு பாசம் பற்றும்படி அதனுள்ளே புகுத்தும். (இப்பாசம் மாயை, இயல்பாக உள்ளது ஆணவம்) அதன்பின், இருவினைகளாகிய குழியிலே ஆழச் செய்யும். அதன்பின், அந்த இருவினைகளுக்கு ஈடான துன்பத்தையும், இன்பத்தையும் பசு நுகர்தற்பொருட்டு அதனை நரகத்திலும். சுவர்க்கத்திலும் சேர்த்து, அங்கே சிலநாள் தங்க வைக்கும், இவையெல்லாம் இப்படித் தொடர்ச்சியாக நிகழ்தல் திரோதான சத்தியாலாம். அச்சத்தி இவ்வாறு செய்வித்தல், பசுக்கள் தம் பசுத்துவத்தின் நீங்கிப் பதியை அடையும் நாளைக் கிட்டுதற் பொருட்டாம்.
Special Remark:
`வீழ்க்கும், ஆழ்க்கும், தாழ்க்கும்` என்பன திரிந்து நின்றன. தாழ்த்தல் - தங்கச் செய்தல். ``மீதுற`` என்றதனால், முன்பே ஒரு பாசம் உள்ளமை விளங்கும். ``ஆழ்க்கும்`` என்றது, குறிப்புருவகம். ``இருவினைக்கண்` என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `ஆங்கவை` என்பது ஒருசொல். ``அவற்றால்`` என்பதன் பின், `வரும் பயனை` என்பது, `நாட்கு` என்பதன்பின், `அணிமைக் கண்` என்பதும் வருவிக்க. முன்னர் ``வீழ்க்கும், ஆழ்க்கும், தாழ்க்கும்`` என்றமையால், ``நாள்`` என்றது, அவை நீங்கும் நாளாயிற்று. நாலுதல், நீளுதல், பாசங்களைச் செலுத்துதல் பற்றி இறைவனது சத்தியும், `பாசம்` என உபசரித்துக் கூறப்படும். ஆயினும் அது நலங்கருதியே செலுத்துதலின், ``நற்பாசம்`` என்றார். `நற்பாசத்தால்` என உருபு விரித்து, `இவையெலாம் நாட்கு உற, நற்பாசத்தால் நான்று அங்கு நண்ணும்` என முடிக்க.
இதனால், `பதி, பசுக்கள் பாசத்தின் நீங்கித் தன்னை அடைதற் பொருட்டுத் திரோதான சத்தியால் அவைகட்கு மாயை கன்மங்கைளச் சேர்த்து, அவை வழியாக ஐந்தொழில் புரியும்` என்பது கூறப்பட்டது.