ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை

பதிகங்கள்

Photo

படைப்பாதி ஆவ பரசிவம் சித்தி
இடைப்பால் உயிர்கட் கடைத்திவை வாங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரம் செய்யப்
படைப்பதி தூலம்அப் பாசத்து ளாமே.

English Meaning:
How Pasas Arise in the Order of Creation

This the way
The Primal Creation was;
Para,
Acting on Siva-Sakti
Puts Jivas to Kevela Slumber
Then, the Unborn Being
Acting on Sukshma (Subtle) Maya
Rouses them to activity;
Finally, the Para
Acting on Pure Maya
Conjoins Malas to Jivas.
Tamil Meaning:
படைப்பு முதலிய செயல்கள் நிகழ்தல் `பரசிவம், பராசத்தி` என்னும் இருவராலேயாம். படைப்பு முதலிய ஐந்தொழில் களாவன, தனுகரண புவன போகங்கைள உயிர்களுக்குச் சேர்ப்பித் தலும், நீக்குதலுமேயாம். இவ்வைந்தொழில், `சூக்குமம், தூலம்` என்னும் இருவகையில் நிகழும். சூக்கும ஐந்தொழிலைச் சிவன் சுத்தமாயையில் தான் நேரே செய்வான். தூல ஐந்தொழிலை அவன் அசுத்த மாயை பிர கிருதி மாயைகளில் அனந்ததேவர், சீகண்டர் வழியாகச் செய்விப்பான்.
Special Remark:
`முதற் பொருள் பொருளால் ஒன்றாயினும் ஞாயிறு ஒன்றே `கதிரவனும், கதிரும்` என இருதிறப்பட்டுத் தாதான்மியமாய் இயைந்து நிற்றல்போல, `சிவம், சத்தி` என இருதிறப்பட்டுத் தாதான் மியமாய் இயைந்து நிற்கும்` என்பது உணர்த்துதற்கு, ``படைப்பாதி ஆவ, பரசிவம் சத்தி`` என்றார். `சத்தியால்` என உருபு விரிக்க. இடைப் பால் - `கேவலம், சுத்தம்` என்னும் இரண்டற்கு இடையேயுள்ள சகலத்தில், படைத்து ஒடுக்கப்படுவன தனுகரணாதிகளேயாதலின், வாளாதே, ``இவை`` எனச் சுட்டிப் போயினார். `சூக்கப் படைப் பாதியை`` எனவும், `தூலப்படைப்பாதி` எனவும் பின் முன்னாக மாற்றிக் கொள்க. ``சூக்கத்தைத் தற்பரம் செய்ய`` என்றதனால், தூலம் பிறரால் செய்யப்படுதல் விளங்கிற்று. அவற்றிற்கு ஏற்ப முதற்காரண வேறுபாடும் காட்டப்பட்டது. ``பாசம்`` என்றது, இங்கு தூலம் அதிதூலமாகிய அசுத்தமாயை பிரகிருதி மாயைகளை.
இதனால், முன் மந்திரத்தில், `பதியே அங்கு அவற்றைப் படைப்பான்` எனக் கூறப்பட்டபொருள் அஃது ஆமாறு வகுத்துக் கூறப்பட்டது.