ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை

பதிகங்கள்

Photo

படைப்பும் அளிப்பும் பயில்இலைப் பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்றும் அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்(து)
அடைத்த அனாதியை ஐந்தென லாமே.

English Meaning:
Five Acts Eternal

Creation, Preservation, and Dissolution,
(That for Jivas grant rest from birth-and-death whirl)
Obfuscation and Grace
(That redeem Jiva after life below)
These, for Sakala souls He filled;
All these acts Five,
Beginningless His are.
Tamil Meaning:
`கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்றனுள் சகலத்தில் படைத்தல், காத்தல், உயிர்களை இளைப்பாற்றுதற் பொருட்டு அழித்தல், சிற்றின்பத்தை அதன் இழிவு அறிந்து வெறாது விரும்பி நுகருமாறு மறைத்தல் ஆகிய முன்னர் நிகழும் அருட் செயல்களையும், சடமாகிய பாசங்களை விடுவித்துத் தன்னைக் காட்டி யருளும் அருளலாகிய பின்னர் நிகழும் அருட்செயலையும் உயிர்கள் பொருந்த வைத்த அனாதியாகிய பரமசிவனை, இத்தொழில்களை நோக்கி, `ஐவர்` என்று கூறலாம்.
Special Remark:
`மறைத்தலும் அதன்வழி நிகழும் படைப்பு முதலியனவும் அருளே` என்றற்கு அவற்றை ``முற்றோன்றும் அருளும்`` என வும், `அழித்தல்கூட அருளோ` என்றும் ஐயத்தை நீக்குதற்கு அதனை ``இளைப்பாற்றும் துடைப்பும்`` எனவும் கூறினார். தன்னிலையில் நிற்கும் சொரூப சிவன் `அனாதிசிவன்` என்றும் உயிர் களின் பொருட்டாய் ஐந்தொழில் செய்யும் தடத்தசிவன் `ஆதிசிவன்` என்றும் சொல்லப் படுவான். `ஒருவனாகிய அனாதிசிவனே, ஐந்தொழில் பற்றி ஐவர் தடத்த சிவராய் நிற்பர்` என்பது உணர்த்துற்கு, ``அனாதியை ஐந் தெனலாமே`` என்றார். ஐவர் - சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன். அவர் சம்பு பட்சத்தினர். சம்பு பட்ச அணுபட்ச விளக்கங்களை மேலே காண்க. நிலைநோக்கி, ``ஐந்து`` என அஃறிணையாகக் கூறப்பட்டது.
இதனால், `முன் மந்திரத்தில் ஒன்பதாகச் சொல்லப்பட்ட பேதங்களில் தூல ஐந்தொழிற்கு உரியனவாய், யாவராலும் அறியப்படுவன ஐந்தே` என்பது கூறப்பட்டது.