ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை

பதிகங்கள்

Photo

பசுப்பல கோடி பிரமன் முதலாப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீங்கி அப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

English Meaning:
When Pasas Leave
Countless are Jivas (Pasu)
From Brahma downward;
Three are the Pasas (bonds)
That bind Jivas;
When bonds of Pasu are sundered,
And Jiva-nature altered,
Jiva will cling to Lord
And never leave Him.
Tamil Meaning:
முன் மந்திரத்தில், ``அனாதி`` எனப்பட்ட பசுக்கள் பிரமதேவன் முதலாகக் கோடிக் கணக்கில் உள்ளன. ஆயினும், அவற்றைக் கட்டியுள்ள பாசங்கள் மூன்றே. (ஆணவம், மாயை, கன்மம்). பதி பசுக்களைக் கட்டியுள்ள பாசங்களை அறுத்துவிட்டால், பசுக்கள் பசுத்தன்மை நீங்கிப் பதியைப் பற்றிக்கொள்ளும். பின்பு அவை பதியை விட்டு நீங்கமாட்டா.
Special Remark:
`பிரமன்` முதலிய பெயர்கள் பிறப்புப் பற்றி வருவனவாம். `பிரமன் முதலா` என்றது, காரணக் கடவுளர்களைக் கீழ்த் தொடங்கிக் கூறியது. `அறுப்பது பதி` என்பது பாரிசேடத்தால் அமைந்தது. `பந்தம் அனாதியாய் இருக்கும் அதினின்றும் நீங்குதல் உளதாதல் போலப் பதியைப் பற்றிய பின்னும் அதினின்றும் நீங்குதல் உளதாகும்போலும்` என நிகழும் ஐயத்தை நீக்குதற்கு ``பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே`` என்றார். பாசங்களின் சத்தி காலப் போக்கில் மெலிவடைவன அதனால் உயிர் அவற்றினின்றும் நீங்குதல் உளதாகின்றது; சிவசத்தி அத்தன்மைத்தன்றாய் என்றும் ஒருபெற்றித் தாம் ஆதலின் சிவத்தை அடைந்த உயிர்க்குப் பின் அதனினின்றும் நீங்கும் நீக்கம் இல்லை என்க.
``துறக்குமா சொலப்படாய் துருத்தியாய்``l
``மேவினார் பிரிய மாட்டா விமலனார்``3
என்னும் திருமொழிகளையும் நோக்குக. `அறுத்தால் நீங்கிப் பற்றிவிடா` என்றதனால், `பசுக்கள்தாமே பாசங்களை அறுத்துக் கொள்ள வல்லுன அல்ல` என்பது பெறப்பட்டது.
``கட்டிய நீயே அவிழ்க்கி னல்லது
எட்டுணை யாயினும் யான்அவிழ்க் கறியேன்``*
என்றது காண்க. ``தலைவனைப் பற்றி விடா`` என ஒருமையும், பன்மையுமாகக் கூறியவற்றால், `பதிப்பொருள் ஒன்றேயன்றி, இரண்டாவதில்லை` என்பது பெறப்பட்டது.
இதனால், `முப்பொருளில் பதி ஒன்றே; பசுக்கள் எண்ணில; பாசம் மூன்று` என்பது கூறப்பட்டது.