ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்

பதிகங்கள்

Photo

காயத்தி லேழ்மூன்று நாளிற் கலந்திட்டுக்
காயத்து டன்மன மாகும் கலாவிந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோ டழியுமே.

English Meaning:
Bindu is Transformed into Mind and Kalas

When in the body for three days it remains thus,
It becomes a part of the Mind;
As Kala Bright — Intelligence illumined;
For those immersed in thoughts holy, it is there retained;
It will depart, their mental powers deteriorated.
Tamil Meaning:
மேற்கூறியவாறு முன் இருபத்தொரு நாள் வரையில் முதிர்ந்து வந்த விந்துக்கள் பின் இருபத்தொரு நாட்கள் வரையில் மனத்தின் வழிப்பட்டு நிற்கும். `சத்தி நிபாதரும், உலகரும்` எனமக்கள் இருதிறத்ததராதலின் அவருள் சத்திநிபாதர் மனம் சிவன் பஞ்சமூர்த்திகளாய் விளங்கி நிற்கின்ற நிவிர்த்தி முதலிய பஞ்ச கலா ரூபமாய் நிற்கும் சுத்த மாயையை நோக்கிச் செல்லுமாகலின் அவர் காம வசப்பட்டு விந்துவை வெளியே வீழ்ந்தொழிய விடாமையின் அவை அவரை விட்டு நீங்கா. (அவரது மனம் பஞ்ச கலைகளை நோக்கிச் செல்கின்ற செலவிற்கு அவை வலிமை தந்து நிற்கும் என்பதாம். அவரொழிந்த ஏனை உலகர் சிறிதுபோதிலே நிலையின்றி ஒழிவதாகிய காம இன்பத்திலே செல்பவர் ஆதலின் அவர் மனம் அங்ஙனம் சென்ற பொழுது அவரது விந்துக்களும் அதனுடன் சென்று வெளியே வீழ்ந்து அழிந்தொழியும்.
Special Remark:
`கலந்திட்டு ஆகும்` `நீங்கா அழியும்` என்னும் பயனிலைகட்கு மேலை மந்திரத்தில் உள்ள ``மருவிய விந்து`` என்பது எழுவாயாய் வந்து இயைந்தது. ``ஏழ் மூன்று நாளில்`` என்பதைப் பின்னும் `காயத்துடன்` என்பதோடும் கூட்டுக. ``கலா விந்து நேயம்`` என்றதை, `சிவ பத்தி, அடியார் பத்தி` என்பன போலக் கொள்க. ``விடாமையின்`` என்பதற்குமுன் `அவர்` என்பது வருவித்து `விடாமையின்`` என முடிக்க. மாயம், நிலையாமை. அஃது ஆகுபெயராய், அதனையுடைய இன்பத்தைக் குறித்தது. `தலைவி தலைவனோடிறந்தாள்` என்பதிற்போல, ``மனத்தோடழியும்`` என்பதில் ஓடுருபு உயர்பொருளொடு வந்தது. மனம் அழிதலாவது, தமது செலவால் விளையும் துன்பத்தால் வருந்ததுதல்.
இதனால், பிண்டத்திற்குக் காரணமாகிய விந்து அதனையுடைய மக்களது இயல்பிற்கேற்ப நிற்குமாறு கூறப்பட்டது.