ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்

பதிகங்கள்

Photo

வித்தினி லன்றி முளையில்லை அம்முளை
வித்தினி லன்றி வெளிப்படுமா றில்லை
வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல
அத்தன்மைத் தாகும் அரன்நெறி காணுமே.

English Meaning:
Siva is Seed,, Bindu is Embryo

Without seed is embryo none,
Except from seed the embryo appears not;
The seed and the embryo are but one, separate never;
Thus are the Bindu and Siva too;
This you should know.
Tamil Meaning:
முளை விதையில்தான் உள்ளது. என்றாலும் அது விதை தனியேயிருக்கும்பொழுது தோன்றாது. நிலத்தில் விதைத்தால் தான் தோன்றும். `வித்தில் முளை உள்ளது` என்றால், அது `குடத்தில் நீர் உள்ளது` என்பது போல்வதன்று. அஃதாவது இடமும், இடத்து நிற்கும் பொருளும் ஆகின்ற அவ்வளவினது அன்று. சிலந்தியின் உடம்பும், அதினின்றும் வெளிவருகின்ற நூலும் போலக் காரண காரிய இயைபுடையனவாம். அது போன்றதே சிவன் உலகத்தைத் தோற்றுவிக்கின்ற முறையும்.
Special Remark:
`அதனை அறிந்துகொள்` என்பது குறிப்பெச்சம். எனவே, இம்மந்திரத்தை ஒட்டணியாகக் கொண்டு பொருளை உய்த் துணர்ந்து கொள்ளல் செயற்பாலதாம். அங்ஙனம் கொள்ளுமாறு:- `மாயையில்தான் உலகம் உள்ளது. என்றாலும் அந்த மாயை சிவனது சங்கற்பத்தில் பொருந்தினால் அதினின்றும் உலகம் தோன்றும். `மாயையில் உலகம் உள்ளது` என்றால் அஃது இடமும் இடத்து நிற்கும் பொருளும் ஆகின்ற அவ்வளவினது அன்று. சிலந்தியினது உடம்பும், அதனுள்ளியிருந்து வெளிப்படுகின்ற நூலும் போலக் காரணகாரிய இயைபுடையனவாம்` என்பது. இங்ஙனம் கூறியதனால், சிலந்தியினது உடம்பினுள் நூல் உள்ளதாயினும் அவ்வுடம்பைத் தாங்கி நிற்கின்ற உயிர் அந்நூலை வெளிப்படுத்தினாலன்றி வெளிப்படாமை போல் மாயையைத் தாங்கி நிற்கின்ற சிவசத்தி அதினின்றும் உலகத்தைத் தோற்றுவித்தாலன்றித் தோன்றாது என்பது விளங்கும்.
``வித்துண்டா மூலம் முளைத்தவா தாரகமாம்
அத்தன்தாள் நிற்றல் அவர்வினையால் - வித்தகமாம்``
என்னும் சிவஞான போதமும் (சூத்திரம், 1 அதிகரணம், 2) இங்கு நினைக்கத்தக்கது.
இரண்டாம் அடியில் உள்ள ``வித்தினில்`` என்பது வேண்டா வழிப் பெற்ற இன்சாரியையுடன் வந்த, `செயின்` என்னும் வினை யெச்சம். `வித்தினில் முளை குடத்துள் நீர்போல நிற்பின் யாவரும் எளிதில் வெளிப்படுத்துதல் கூடும். இஃது அன்னதன்று ஆகலின் நிலத்தாலன்றி இயலாது` என உவமைக்கண் பொருளிலும் அவ்வாறு கொள்க. `மாயையாகிய விந்துவிற்குச் சொல்லியது சுக்கிலமாகிய விந்துவிற்கும் பொருந்தும்` என்பது கருத்து.
இதனால், அண்டபிண்டங்களாகிய உலகம் சிவனது சங்கற்பத்தாலன்றி உற்பத்தி கூடாமை கூறப்பட்டது.