ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்

பதிகங்கள்

Photo

கொண்ட இவ்விந்து பரமம் போற்கோதற
நின்ற படம்குடி லாய்நிலை நிற்றலின்
கண்ட கலாதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மாமாயை யாகுமே.

English Meaning:
Bindu is Cause-Effect

All-pervasive like the Param
The Bindu stands;
Veiling all like a filament vast;
And filling everywhere as the space in pots all;
As Mamaya that is Cause and Effect
It all cosmos pervades.
Tamil Meaning:
உயிர்களை மேற்கூறியவாறு அண்டத்தையே யன்றிப் பிண்டத்தையும் ஆட்கொள்கின்ற விந்து பரம்பொருளைப் போலவே மல கன்மங்களோடு விரவுதலின்றித் தூயதாய், ஆயினும் நூலும் மண்ணும், ஆடையும் குடமுமாய்க் காரியப்படுதல் போலக் காரியப்படுவதாய், காரண ரூபத்தில் என்றும் அழிவின்றி, கலை முதலிய தத்துவங்களின் காரியமாய் உள்ள அனைத்து அண்டங் களிலும் அவையேயாய்க் கலந்து பெருமாயையாய் உள்ளது.
Special Remark:
பெருமையாவது அனைத்துப் பொருட்கும் வியாபகமாய் அவற்றைத் தன்னுள் அடக்கி நிற்றல், அதுபற்றியே சுத்த மாயை `மகாமாயை` என்றும், `ஊர்த்துவ மாயை` என்றும் சொல்லப்படுகின்றது என்பதாம். ஊர்த்துவம், மேல். அசுத்த மாயை `அதோ மாயை` எனப்படும்.
`சுத்த மாயையின் காரியம் விருத்தியேயன்றிப் பரிணாம மன்று` என்பது, ``படம் குடிலாய் நிலை நிற்றலின்`` என்பதனால் கூறப்பட்டது. ``செயல் பரிணாமமன்று; புகழ்ந்திடும் விருத்தியாகும், படம் குடிலானாற் போல`` எனச் சிவஞான சித்தியிலும் (முதற் சூத்திரம், 24) சொல்லப்பட்டது. இதன் இரண்டாம் அடியில் இன எதுகை வந்தது.
இதனால் சுத்த மாயையினது பெருமை விளக்கப்பட்டது.