ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்

பதிகங்கள்

Photo

அருந்திய அன்ன மவைமூன்று கூறாம்
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்ன
திருந்தும் உடல்மனம் ஆங்கது சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதம தாகுமே.

English Meaning:
How Food Builds Body, Blood and Mind

The food you partake in divisions three go
To the body, to the mind and to the excreta;
The parts that to the body and the mind go
Verily become the blood, first.
Tamil Meaning:
பலவகையாக உண்ணப்பட்ட உணவுகள் மூன்று கூறுபடும். ஒரு கூறு உடம்பாய்ப் பரிணமிக்கும். மற்றொரு கூறு மனத்தின் தன்மையாய் அமையும். இன்னொரு கூறு மலமாகிக் கழிந்தொழியும். உணவால் திருத்தம் உறுகின்ற உடம்பும், மனமும் சேர்ந்து முன்னாட்களில் காரண நிலையில் `சாரம்` என்பதாய் இருக்கும்.
Special Remark:
``உடம்பு`` என்றது அதன்கண் உள்ள குருதி, முதலிய தாதுக்களையும், ``மனம்`` என்றது அதனது நினைவையுமாகும். தாயின் முலைப்பாலுக்கு அவளது உடம்பில் உள்ள குருதி முதலி யனவும், குழவியிடத்துள்ள அன்பும் காரணமாதல் போல்வதே உடம்பில் உள்ள குருதி, ஊன், நிணம் முதலிய தாதுக்கள் சாரமாதற்குக் காரணம் ஆதல்.
இதனால், மேல், ``மது வித்திலே மலர் அன்னமதாகி`` என்றது இனிது விளக்கப்பட்டது.