ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை

பதிகங்கள்

Photo

மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தால் மஞ்சனம் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன் றணிநிலம் செய்யுமே.

English Meaning:
Samadhi Rituals
Then pour the ashes white and powdered incense,
Shower flowers diverse, Kusha grass and Bilva leaves,
Sprinkle water holy,
And raise a platform three feet by three.
Tamil Meaning:
திருமேனியைப் பரிவட்டத்தால் மூடிய பின்பு திருவெண்ணீறு, மணப்பொடி, பலவகை மலர்கள், தருப்பைப்புல், வில்வ இலை முதலியவைகளை நிரம்பச் சொரியுங்கள்; பின் அருக்கியம் முதலியவைகளைக் கொடுத்துக் கோயில் எடுத்தற்குரிய தொடக்கத்தைச் செய்து விடுங்கள்.
Special Remark:
`தொடக்கத்தைச் செய்யுங்கள்` என்றதனால், `திரு மேனியை மண்ணால் மூடி மறையுங்கள்` என்பது தானே பெறப் பட்டது. இவ்விடத்தில் கூறுதற்கு உரிய கோயில் எடுத்தலை ஒரு காரணம் பற்றி, ``பொற்பமர் ஓசம்`` என முன்னே கூறினார் ஆகலின், `அதனை இங்குக்கொள்க` என்றற்கு அங்குக் கூறியதனை இம்மந்திரத்து ஈற்றடியில் அனுவதித்துக் கூறினார். மீது `சொரிந்திடும்` என்பதை `வில்வமும்` என்பதன்பின் கூட்டுக. இங்கு மஞ்சனமாவது அருக்கியபாத்திய ஆசமனங்களைக் கொடுத்தல்.