
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்
பதிகங்கள்

அகலிட மாய்அறி யாமல் அடங்கும்
உகலிட மாய்நின்ற ஊனத னுள்ளே
பகலிட மாம்உளம் பாவ வினாசன்
புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே.
English Meaning:
God is PervasiveIn the Spaces Vast, unknown He pervades,
In the fleshy body He rapturous resides,
He dispels sin and Wisdom`s Sunlight spreads
He, the Holy One, that our Refuge is.
Tamil Meaning:
அடியவரது பாவத்தை ஒழிப்பவனாகிய சிவன் அண்டமே இலிங்கமாகக் கொண்டு அமர்ந்திருத்தல் அன்றியும் உண்மையை உணராமையால் வீணாய் ஒழிகின்ற ஒரு நிலையில் பொருளாகிய உடம்பினுள்ளே அதன் நடுவிடமாகிய இருதய தாமரையைத் தான் எழுந்தருளியிருக்கும் இடமாகக் கொண்டு விளங்குகின்ற புண்ணிய மூர்த்தியாயும் இருக்கின்றான்.Special Remark:
`அகலிடமாயும்` என்னும் எதிரது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. அறியாமையாவது, ஊனுடம்பே சிவனுக்கு ஆலய மாயும் இருத்தலை அறியாமை. ``அறியாமல்`` என்பதன் பின், `இருத் தலால்` என்பது எஞ்சி நின்றது. `அறியாமை` எனப் பாடம் ஓதி, `அறியா மையால்` என உருபு விரித்தலும் ஆம். ``அறியாமல் அடங்கும்`` என்ற தனால், ``பயனின்றி`` என்பது பெறப்பட்டது. உகல் - உகுதல்; அழிதல். பகல் - நடுவிடம். `நுகத்திற் பகல் ஆணிபோல நடுவு நிலைமையை உடையர்` என்றல் வழக்காதல் அறிக. (``நெடு நுகத்துப் பகல்போல - நடுவு நின்ற நன்நெஞ்சினர்`` - பட்டினப் பாலை - 106, 27. ``பகலன்ன வாய்மொழி`` - புறப்பொருள் வெண்பா மாலை - வாகைப்படலம் - அரச வாகைக்கொளு) `முனம்` என்பது பாடம் அன்று. புண்ணியம், சிவபுண்ணியம், `அப்புண்ணியத்திற்கு ஏற்புடைய மூர்த்தி` என்றபடி. உள்ளக் கோயிலில் வழிபடுதல், `கிரியை, யோகம்` என்னும் சிவ புண்ணியங்களாதலை நினைக. சிவனை, ``பாவ வினாசன்`` என்றதனால் `இவ்வழிபாட்டில் நின்றாரது வினையைப் போக்குபவன் அவன்` என்பது குறிப்பால் உணர்த்தப் பட்டது. சிவபுண்ணியத்தை நோக்க உலக வினைகளுள் நல்வினையும் பாவமேயாகும்.இதனால், முன்னை மந்திரத்தில் ``உடல் கோயில் கொண்டான்`` எனப் பொது வகையாற் கூறியது சிறப்பு வகையால் இனிது விளக்கப்பட்டது.
இவ்விரண்டு மந்திரங்களும் வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் ஆயின.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage