ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்

பதிகங்கள்

Photo

அகலிட மாய்அறி யாமல் அடங்கும்
உகலிட மாய்நின்ற ஊனத னுள்ளே
பகலிட மாம்உளம் பாவ வினாசன்
புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே.

English Meaning:
God is Pervasive

In the Spaces Vast, unknown He pervades,
In the fleshy body He rapturous resides,
He dispels sin and Wisdom`s Sunlight spreads
He, the Holy One, that our Refuge is.
Tamil Meaning:
அடியவரது பாவத்தை ஒழிப்பவனாகிய சிவன் அண்டமே இலிங்கமாகக் கொண்டு அமர்ந்திருத்தல் அன்றியும் உண்மையை உணராமையால் வீணாய் ஒழிகின்ற ஒரு நிலையில் பொருளாகிய உடம்பினுள்ளே அதன் நடுவிடமாகிய இருதய தாமரையைத் தான் எழுந்தருளியிருக்கும் இடமாகக் கொண்டு விளங்குகின்ற புண்ணிய மூர்த்தியாயும் இருக்கின்றான்.
Special Remark:
`அகலிடமாயும்` என்னும் எதிரது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. அறியாமையாவது, ஊனுடம்பே சிவனுக்கு ஆலய மாயும் இருத்தலை அறியாமை. ``அறியாமல்`` என்பதன் பின், `இருத் தலால்` என்பது எஞ்சி நின்றது. `அறியாமை` எனப் பாடம் ஓதி, `அறியா மையால்` என உருபு விரித்தலும் ஆம். ``அறியாமல் அடங்கும்`` என்ற தனால், ``பயனின்றி`` என்பது பெறப்பட்டது. உகல் - உகுதல்; அழிதல். பகல் - நடுவிடம். `நுகத்திற் பகல் ஆணிபோல நடுவு நிலைமையை உடையர்` என்றல் வழக்காதல் அறிக. (``நெடு நுகத்துப் பகல்போல - நடுவு நின்ற நன்நெஞ்சினர்`` - பட்டினப் பாலை - 106, 27. ``பகலன்ன வாய்மொழி`` - புறப்பொருள் வெண்பா மாலை - வாகைப்படலம் - அரச வாகைக்கொளு) `முனம்` என்பது பாடம் அன்று. புண்ணியம், சிவபுண்ணியம், `அப்புண்ணியத்திற்கு ஏற்புடைய மூர்த்தி` என்றபடி. உள்ளக் கோயிலில் வழிபடுதல், `கிரியை, யோகம்` என்னும் சிவ புண்ணியங்களாதலை நினைக. சிவனை, ``பாவ வினாசன்`` என்றதனால் `இவ்வழிபாட்டில் நின்றாரது வினையைப் போக்குபவன் அவன்` என்பது குறிப்பால் உணர்த்தப் பட்டது. சிவபுண்ணியத்தை நோக்க உலக வினைகளுள் நல்வினையும் பாவமேயாகும்.
இதனால், முன்னை மந்திரத்தில் ``உடல் கோயில் கொண்டான்`` எனப் பொது வகையாற் கூறியது சிறப்பு வகையால் இனிது விளக்கப்பட்டது.
இவ்விரண்டு மந்திரங்களும் வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் ஆயின.