ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்

பதிகங்கள்

Photo

ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் மீசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்
றார்த்தனர் அண்டங் கடந்தப் புறம்நின்று
சாத்தனன் என்னும் கருத்தறி யாரே.

English Meaning:
Lord (Sadasiva) protects the Celestials from afar

The countless Devas gloried My Lord
``O! Southern Breeze, fragrant cool`` they praised,
``O! Bounteous One,`` they adored,
But they know not this;
From beyond the Spaces Vast
He His protection granted.
Tamil Meaning:
தேவர் பலரும் தாம்செய்த புண்ணியத்தின் பயனாகச் சிவன் உருவத்திருமேனி கொண்டு வெளிப்படக் கண்டு புகழ்ந்தும், வாழ்த்தியும், இன்பப் பொருளாக உணர்ந்தும், வேண் டுவார் வேண்டுவதை அருளப்பெற்று, `வரையாது வழங்கும் வள்ளல்` என ஆரவாரித்தும் நின்றாராயினும், `அவன் உண்மையில் உலகங் கடந்தவனே` என்னும் உண்மையை உணர்கின்றிலர்.
Special Remark:
`அஃது அவர்கள் அவனைத் தம்மில் ஒருவனாக எண்ணும் அதனால் விளங்கும்` என்பது கருத்து. எனவே, `அவன் அண்டலிங்கமாய் நின்று வழிபடுவார் செய்யும் வழிபாட்டினை ஏற்றுப் பயன் தருவானாயினும் உண்மையில் அவன் உலகங்கடந்தவன் என்பதை அறியாமை குற்றமாம்` என்றபடி. அவனது உண்மை நிலையை அறிந்த பொழுதே, `அவன் நமக்காக இறங்கி வந்து அருள் செய்கின்றான்` என்பது விளங்க, அதனால் அவன்மாட்டு அன்பு நிகழ் தலும், அதனை அறியாத பொழுது அங்ஙனம் அன்பு நிகழாமையும். அன்பு நிகழாது செய்யும் வழிபாடு, வழிபாடு ஆகாமையும் உளவாதல் பற்றி, `அவனது உண்மையை உணராமை குற்றம்` எனக் கூறினார்.
இதனால் `அண்டலிங்கம் முதலிய இலிங்கங்களாய்ச் சிவன் நிற்றல் உயிர்கள் மாட்டுவைத்த அருள் காரணமாக` என்பது கூறப்பட்டது.