ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்

பதிகங்கள்

Photo

முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும்அக் கொம்பு சிலை நீறு கோமளம்
அத்தன்றன் ஆகமம் அன்னம் அரிசியாம்
உய்த்ததன் சாதனம் பூமணல் லிங்கமே.

English Meaning:
How to fix Linga

Pearls, gems, corals and emerald
Wood of sandal, granite hard, and ashes holy
Siva`s Agama, and rice in grain and cooked
When you pour in these and fix the Linga
Haunting indeed is His delicious fragrance.
Tamil Meaning:
முத்து முதலிய இவை பலவும் இலிங்கமாகச் செய்து கொள்ளுதற்குரிய பொருள்களாகும்.
Special Remark:
மொய்த்த - ஒளிமிகுந்த. கொம்பு - மரக்கழி. ``கொத்தும்`` என்றதனால், அது செதுக்கி உருவாக்கப்படுதல்` விளங்கிற்று. கோமளம் - அழகு. அஃது ஆகுபெயராய் இரத்தினத்தை உணர்த்திற்று. இதனால், படிகம், மரகதம் முதலாக எஞ்சிய இரத்தினங்களைக் கொள்க. சிலை - கருங்கல் வகைகள். `மாக்கல் கூடாது` - என்பர். ஆகமம் - சிவாகமம் எழுதப்பட்ட சுவடி. திருமுறைச் சுவடி களும் இதனானே பெறப்படும். அன்னம் - சோற்றுருண்டை. அரிசி - அரிசித்திரள். பூ - தனி மலரும், கோத்த மலரும். இனி இதனை இரட்டுற மொழிந்து, `மண்` எனவும் கொண்டு, `பிசைந்து பச்சையாக வைக்கும் மண்ணும், சுட்டுக் கொள்ளும் மண்ணும்` என உரைக்க. `இலிங்கம் உய்த்து அதன் சாதனம் ஆம்` என மொழிமாற்றி, `இலிங்க மாகச் செயப்பட்டு அதற்கு மூலப்பொருளாம்` என உரைக்க. சாதனம் ஆதல் முக்காலத்தினும் ஒக்கும் ஆதலின். அதனை இங்கு இறந்த காலத்தில் வைத்துக் கூறினார். ஏகாரம் ஈற்றசை.
சிவவழிபாடு `ஆன்மார்த்தம், பரார்ரத்தம்` என இரு வகைப் படும். ஆன்மார்த்தம் - தன்பொருட்டு. பரார்த்தம் - பிறர் பொருட்டு. அவரவரும் தம் தம் இல்லத்திலாயினும், பூசைப் பெட்டகத்திலாயினும், இலிங்கத்தை எழுந்தருள்வித்துக் கொண்டு வழிபடுவது ஆன்மார்த்த வழிபாடு. வீரசைவர், `இலிங்கம் அங்கத்திலே (உடம்பிலே) ஒன்றாய் நீங்காதிருக்கத் தக்கது` எனக் கொண்டு வழிபாட்டுக் காலத்தில் இலிங்கத்தை இடக்கையிலே வைத்து, வலக்கையால் வழிபடுவர்.
உலகம் முழுவதற்குமாகத் திருக்கோயில்களில் இலிங்கம் எழுந்தருள்வித்துச் சிவாசாரியர்களால் செய்யப்படுவது பரார்த்த வழிபாடு.
இவ்விரண்டனுன் மேலை மந்திரம் பரார்த்த லிங்கம் ஆவன வற்றைக் கூற இம்மந்திரம் ஆன்மார்த்த லிங்கம் ஆவனவற்றைக் கூறிற்று.
பரார்த்த லிங்கம் இடம் விட்டுப் பெயராதிருத்தலால், `அசல லிங்கம்` என்றும், ஆன்மார்த்த லிங்கம் வேண்டும் இடங்களில் கொண்டு செல்லப் படுதலாலும், வழிபாட்டின் பொழுதும், அதற்குப் பின்னும் இடம் மாற்றி வைக்கப்படுதலாலும் `சல லிங்கம்` என்றும் சொல்லப்படும். சலம் - அசைவுடையது, அசலம் - அசைவில்லது. இவற்றுள் மேலைமந்திரம் அசல லிங்கமாவனவற்றைக் கூற, இம் மந்திரம் சவலிங்கமாவனவற்றைக் கூறிற்று. இவற்றுள் அசலல லிங்கம் ஆதற்கு உரியனவும் உள; அவற்றை அறிந்து கொள்க.
இனி சல லிங்கமும், `கணிகம், திரம்` - என இரண்டு வகைப்படும். கணிகம் - நிலையில்லாதது; அவ்வப்பொழுது ஆக்கி அமைத்து, வழிபட்டவுடன் விட்டு விடப்படுவது.
திரம் - நிலையுள்ளது, அஃது ஒருமுறை எழுந்தருள்வித்துக் கொண்டு, வாழ்நாளளவும் விடாமல் வழிபடப்படுவது.
`இவற்றுள் இங்குக் கூறப்பட்டவை இன்ன இன்ன இலிங்கமாதற்கு உரியன` என்பது அந்த அந்தப் பொருள் இயல்பு பற்றியும் அவரவரது கருத்துப் பற்றியும் கொள்க.