ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்

பதிகங்கள்

Photo

அதுஉணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி
எதுஉண ராவகை நின்றனன் ஈசன்
புதுஉணர் வான புவனங்கள் எட்டும்
இதுஉணர்ந் தென்னுடல் கோயில்கொண் டானே.

English Meaning:
No Single way of worship

They who sought Him in one Special Way
Knew Him not in any way;
And thus it is the Lord
That the eight universe pervades;
Of my heart, too, a temple made.
Tamil Meaning:
உபநிடதங்களின் வழி தன்னை `அது` என்னும் அளவில் தன்னைப் பொதுவாக உணர்ந்தவன் பின்பு தனது ஒப்பற்ற இயல்புகளைச் சிறப்பாக உணர வேண்டி ஆராயும்பொழுது அவன் அவ்வியல்புகளுள் ஒன்றையேனும் உணராதபடி மறைந்து நிற்கின்ற சிவன், வேதாந்திகட்கு மிகவும் புதுமையாய்த் தோன்றுகின்ற அண்டலிங்கமாகிய இந்தத் தன்மையை உணர்ந்த என் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு விளங்குகின்றான்.
Special Remark:
``அது`` என்றது வேதாந்த மகாவாக்கியத்தில் உள்ள - தற்பதத்தினை. அப்பதத்தின் பொருளை அப்பதமாகக் காரியத்தைக் காரணமாக உபசரித்துக் கூறினார். ``நாடி`` என்னும் எச்சம் ``உணரா`` என்னும் எதிர்மறைப் பெயரெச்சத்தைக் கொண்டு முடிந்தது. `தேடி யறிந்திலர்` என்பது போல `எதுவும்` என்னும் இழிவுசிறப்பும்மை தொகுக்கப்பட்டது; `அண்டமே இலிங்கம்` என்னும் சைவாகமப் பொருள் வேதாந்திகட்குப் புதுமையாய்த் தோன்றுதல் பற்றி அதனை, ``புது உணர்வு`` என்றார். அசுத்த மாயா புவனங்கள் பூதபுவனம், தன் மாத்திரைப் புவனம், மனோ புவனம், அகங்கார புவனம், புத்தி புவனம், பிரகிருதி புவனம், புருட புவனம், மாயா புவனம் என ஓராற்றால் எட்டு வகைப்படுதல் பற்றி அவற்றை, ``புவனங்கள் எட்டும்`` என்றார். ``எட்டும்`` என்றது அதிகார இயைபால், எட்டும் இலிங்கம் ஆதலைக் குறித்தது. `இது உணர்ந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. அண்டலிங்கத்தின் உண்மையை உணர்ந்ததனால் தாம் எய்திய பயனைக் கூறவே, `பிறரும் அதனை உணர்வாராயின் அப்பயனைப் பெறுவர்` என்பது தானே அமைந்தது.
ஈசன் உடலைக் கோயிலாகக் கொள்ளுதல் உள்ளத்தில் வீற்றிருத்த லாலேயாம். இஃது இவ்வாறு கூறப்படும் பிற இடங்கட்கும் ஒக்கும். இதனை இட்டலிங்கமாக உடம்பில் பொருந்தியிருத்தலாக உரைப்பாரும் உளர்; முன்னைத் தந்திரத்தில் நாயனார் `தவ வேடம்` கூறிய இடத்திலாதல், பிறிதோர் இடத்திலாதல் தூல உடலில் சிவன் வேறோர் இலிங்கமாய்ப் பொருந்தியிருத்தலைக் கூறிற்றிலர். ஆதலால், அது பொருளாகாமை அறிக.
இதனால், அண்டலிங்கத்தினை உணராதாரது தாழ்வும், அதனை உணர்ந்தாரது சிறப்பும் கூறப்பட்டன.