ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்

பதிகங்கள்

Photo

விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்
கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்
எண்ணினைச் சென்றணு காமல் எணப்படும்
அண்ணலைச் சென்றணு காபசு பாசமே.

English Meaning:
God is Beyond Reach of Pasu and Pasa Knowledge

High be the clouds that soar
They never shall touch the heaven`s roof;
Varied be the sights that loom
They never shall touch the eye`s orbs;
Even so,
Neither Pasu nor Pasa shall reach Him,
Whom contemplation scarce comprehends.
Tamil Meaning:
பரந்துஎழும் மேகக் கூட்டம் அருவமாகிய ஆகாயத்தைப் பற்றமாட்டாது, பல காட்சிப் பொருள்களும் கண்ணொளியைத் தமக்கு இடமாகக் கொண்டு நிற்க மாட்டா. அவை போல, எண் வரையறை யில்லையாம்படி முடிவின்றி எண்ணப் படுவனவாகிய பசுக்களைப் பற்றிநிற்கின்ற பாசங்கள், தலைவனாகிய சிவனைச் சென்று அணுகமாட்டா.
Special Remark:
இதனுள் இரண்டு எடுத்துக்காட்டுவமைகள் கூறப் பட்டன. `பாசம்` என்னாது ``பசு பாசம்`` என்றதனால், `பசுக்களைப் பற்றுகின்ற அவை பதியாகிய இறைவனைப் பற்ற மாட்டா` என்ற தாயிற்று. ஆகவே, அப்பாசங்களால் தோற்றுவிக்கப் பட்ட அறிவைக் கொண்டோ, அவற்றின் நீங்கியவழி எதனையும் அறியமாட்டாத தனது அறிவைக்கொண்டோ உயிர் இறைவனை அறியமாட்டா` என உணர்த்துதல் இம்மந்திரத்தின் கருத்தாதல் விளங்கும். அதனால், `பதி ஞானத்தால் பதியைத் தலைப்பட்டு உணர்வோரே சுத்தசைவர்` என்பதும், `அவ்வாறன்றி, பாசஞான பசுஞானங்களால் உணர்வோர் மார்க்க சைவரே` என்பதும் கூறியவாறாம். ``அண்ணலைச் சென்றணுகா`` என்பதை இறுதியிற் கூட்டி உரைக்க.
இதனால், மேற்கூறியவர் எல்லாரும் சுத்த சைவராகாது மார்க்க சைவராதற்குக் காரணம் கூறப்பட்டது.