ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்

பதிகங்கள்

Photo

சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓரேழும்
சத்தும் அசத்தும் தணந்த பராபரை
உய்த்த பராபரை உள்ளாம் பராபரை
அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே.

English Meaning:
Doctrine of Grace in Suddha Saivam

She transcends the worlds of Matter, Pure and Impure,
And the seven states of Turiya awareness
And the categories of Real and Unreal,
She is Paraparai;
She grants the soul deliverance;
She is ever within;
She is the Lord`s Divine Grace;
The Arul Sakti that is all pervasive.
Tamil Meaning:
`சுத்தம், அசுத்தம், மிச்சிரம்` என்னும் மூவகைப் பல்வேறு நிலைகளையும், மாயை கன்மங்களின் காரண காரிய நிலை களையும் கடந்து, பரையாவும், அபரையாதற்குரியவளாயும் உள்ள, சிவனது அருளாகிய சத்தி, எல்லாப் பொருள்களையும் நடத்து பவளாய், அவற்றின் உட்பொருளாகி எவ்விடத்திலும் நிறைந்து நிற்கின்றாள்.
Special Remark:
``துரியங்கள்`` என்றதனால், ``சுத்தம், அசுத்தம்`` எனப் பட்டனவும் அவற்றில் நிகழும் சாக்கரம் முதலியனவும் அவத்தையாதல் அறியப்படும். இங்கு, `சுத்தம்` என்றது, கேவலமல்லாத சகலத்தை, அசுத்தம், கேவல சாக்கிரம் முதலியன. இவற்றின்பின் வாளா ``துரியங்கள்`` என்றதனால் அவை முன் இரண்டைக் கடந்த சுத்த சாக்கிரம் முதலியவாயின. இவ்வைந்தோடு சுத்த அசுத்தங்களை ஒவ் வொன்றாக்கி, `ஏழு என்றார், காரண காரியங்களையே சத்து, அசத்து என ஓதினார், அவை அங்ஙனம் சொல்லப்படுதற்கு உரியன வாகலின். உய்த்தல் - நடத்துதல், இதற்குச் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. பின்வந்த ``பராபரை`` இரண்டும், `சத்தி` என்னும் அளவாய் நின்றன. ``அத்தன் அருட் சத்தி`` என்பதை இரண்டாம் அடியின் இறுதியிற் கூட்டி யுரைக்க. ``அத்தன் அருட் சத்தி எங்குமாம்`` என்றது, `அந்நிலையை உணர்ந்து அதில் அடங்கி நிற்போர் மார்க்க சைவர்` என்றதாம்.
இதனால், அத்தனது அருள்நிலையை அடைந்தோர் மார்க்க சைவராதல் கூறப்பட்டது.