ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்

பதிகங்கள்

Photo

மாறாத ஞானம் மதிப்பற மாயோகம்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
பேறான பாவனை பேணி நெறிநிற்றல்
கூறாகும் ஞானி சரிதை குறிக்கிலே.

English Meaning:
Way of Jnani

He stills the incessant flow of thought,
That even Yoga`s severity stills not,
With Jnana he effaces the Self
And in Bhava identifies with Siva;
That in brief is worthy Jnani`s story.
Tamil Meaning:
சித்தாந்த சைவத்தின் அங்கமாகும் மார்க்க சைவரது ஒழுக்கத்தைச் சொல்லுமிடத்து,தொன்று தொட்டுத் தொலையாது நிற்கின்ற தற்போதத்தைப் பெரிதாக எண்ணாமல், அஞ்ஞானத்தி னின்றும் நீங்கமாட்டாத அறிவை மேற்கூறிய உயர்ந்த யோகமாகிய பிராசாத யோகத்தால் அஞ்ஞானத்தினின்றும் நீங்கித் தெளிவடையும் படிச் செய்து, அதனைச் சிவனது அறிவேயாக ஆக்கிப் பெறற்கரிய பேறாகிய சிவோகம் பாவனையைத் தலைப்பட்டு அதனைப் போற்றி அந்தப் பதிஞான நெறியில் நிற்றலேயாகும்.
Special Remark:
`யோகத்தால்` என உருபு விரிக்க. சிவம், ஆகுபெயர். ``பேறான`` என்பது, `சிறந்த பேறாகிய` என்னும் பொருளைக் குறித்தது. ``கூறாகும்`` என்னும் பெயரெச்சம். ``ஞானி`` என்பதன் முதனிலையோடு முடிந்தது. ஞானமாவது, சித்தாந்த ஞானமே யாதல் அறிந்து கொள்க.
இதனால், மார்க்க சைவரது ஞான ஒழுக்கம் கூறப்பட்டது.