ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை

பதிகங்கள்

Photo

அதுவரு ளும்மரு ளான துலகம்
பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளும்
மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி
இதுவருள் செய்யும் இறைஅவ னாமே. 

English Meaning:
Sakti Grants Grace

That God who is All-knowledge thus
Grants this world that is unreal;
For the good ones of high praise
He grants the vision of His Dancing Hall;
The Sakti that grants all this
Is the fragrant flower-bedecked Grace
That is the Consort of Lord.
Tamil Meaning:
`அது` என்று பொதுமையிற் சுட்டப்படும் முதற் பொருள் செய்கின்ற அருள் அனைத்துயிர்க்கும் பொதுவாக உலகின்பத்தையும், உயர்ந்தோர்க்குச் சிறப்பாகப் பேரின்பத்தையும் தரும். அவ்வருளும், செந்தாமரை வெண்டாமரை மலர்களில் வீற்றிருக்கின்ற திருமகள், கலைமகள் என்னும் இருவர்க்கும் தலைவியாகிய உமையே. அதனால், வாழ்நாளை நீட்டிக்கும் அருளைப்புரியும் இறைவன், அவ்வுமைக்குத் தலைவனாகிய சிவபெருமானே.
Special Remark:
`அதனால் அப்பெருமானை நினைந்தே வாழ்நாள் நீட்டிப்பில் முயல்க` என்பது குறிப்பெச்சம். ``அருளும்`` மூன்றில் முன்னது எச்சம்; ஏனையவை முற்று. `உலகத்திற்கு` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. மது, சிவானந்தத் தேன்.
இதனால், வாழ்நாள் நீட்டிப்பின் முயற்சிக்கு இன்றியமை யாததொரு துணை கூறப்பட்டது.