ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்

பதிகங்கள்

Photo

ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப்பல் கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே. 

English Meaning:
Meditation on Appropriate Mantra to Attain Kaya Siddhi

If you in ardour pursue
The search for power to acquire Kaya Siddhi,
You shall flourish far and wide,
Like a seed of paddy planted
In a million, million fields;
Do you therefore meditate single-minded
On the mantra that conquers Fate.
Tamil Meaning:
மேன்மேல் வளரத்தக்கதாகிய காய சித்தி ஆற்றலைப் பெற நீ விரும்புவையாயின், அச்சத்தி ஒவ்வொரு நெல்லின் அளவாக மெல்ல மெல்ல வளர்கின்ற நுட்பத்தை உடலில் அளவற்ற இடங்களில் பாகுபடுத்திக் கண்டு. அவ்விடங்களில் எல்லாம், மேற்பலவகையாலும் முறைப்படச் சொல்லிய மந்திரங்களின்வழி அதனுள் ஒடுங்குவாயாக.
Special Remark:
`சனனம்` என்பது இடைக்குறைந்து நின்றது. `சனனம்` என்றது காயத்தை. இவ்வாறன்றி, `ஆகுஞ்சன இருக்கை` எனவும் உரைப்பர். வேத சத்தி, உடம்பின் நிலையாமையைமாற்றி நெடிது வாழச் செய்கின்ற ஆற்றல். `அன்புறக் கொள்ளின்` என்பதை, `கொள்ள அன்புறின்` என மாற்றிக் கொள்க. தினை, எள், கடுகு முதலியன போல, சிறுமைக்குக் காட்டப்படுவனவற்றுள் நெல்லும் ஒன்றென்க. நெல்லின் - நெல்லின் அளவாக. இனி, `நெல் - நெற்பயிர்` எனக் கொண்டு, `நீர் கொளு நெல்லின்` எனவும் பாடம் ஓதுப. ``களத்தினால்`` என்றது வேற்றுமை மயக்கம்.
இதனால், காய சித்தி உபாயங்கள் மேற் சில வகையால் தொகுத்துணர்த்தப்பட்டதாயினும், உண்மையில் அது பரந்து கிடப்பது என்பது உணர்த்தி, `அவற்றை அறிந்து அனுபவமாகச் செய்க` என முடித்துக் கூறப்பட்டது.