ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்

பதிகங்கள்

Photo

உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே.

English Meaning:
Course Prana and Apana Through Meditation

Rouse the Prana that resides in the Navel Centre
By meditating and chanting Siva mantra;
Retain that breath in the Ajna frontal
Then rouse the apana breath by meditation;
That way you Siva become.
Tamil Meaning:
பூரக ரேசகங்களை மேற்கூறியவாறு அம்ஸ மந்திரத்தாற் செய்தபின் கும்பகம் செய்யும் பொழுது `ஹாம்` என்னும் வித்தெழுத்தாலே (பீஜாட்சரத்தாலே) பிராணனைச் சுழுமுனை நாடி வழியே கண்டத்தளவும் செலுத்திப் பின், `ஹௌம்` என்னும் வித்தெழுத்தால் ஆஞ்ஞையை அடைவித்து, அங்கே மலவெழுத் துக்கள் நீங்கிய திருவைந்தெழுத்து, `தத்துவமசி` மகாவாக்கியப் பொருளையும், `சோஹம்` என்பதன் பொருளையும் தருமாற்றை உபதேச முறையான் உணர்ந்து அதனானே அவ்வாயுவை அசையாது நிறுத்திப் பின் அபானவாயு எழத் தொடங்குமாயின், அதனைப் பிரணவத்தால் அடக்கிப் பிராணனை முன்போலவே மேலெழச் செய்யின், அவ்வாறு செய்பவன் சிவமாந் தன்மையை அடைவான்.
Special Remark:
``உந்திச் சுழியின் உடன் ஏர் பிராணன்`` என்றது, `பிராணனை அஃது எழுமிடத்திலிருந்தே இவ்வாறு எழுப்புக` என்றவாறு. உடன் - விரைவாக. ஏர்தல் - எழுதல். நிறுத்துதற்கு ``சிவமந்திரத்தினால்`` என விதந்தோதியது போலப் பிராணனையும், அபானனையும் எழுப்புதற்கு உரிய மந்திரங்களை விதவாமையானும், ``எழுப்பி`` என வாளாகூறி யொழியாது ``சிந்தித் தெழுப்புக`` என்றமையானும், பிராணனை உள்வாங்குதற்குரிய ``ஹம்`` என்பதனை மாத்திரை கூட்டி அது நெடிது செல்லுமாறு எழுப்பி, அப்பிராணன் நிற்றற்கு அம்மந்திரத்தை ஹௌகாரமாகத் திரித்து முடித்தல் வேண்டும் என்பதும், அபானனை மூலாதாரத்திற்குரிய பிரணவத்தால் எழுப்புதல் வேண்டும் என்பதும் பெறப்பட்டன.
மந்திரங்கள் வாயினால் சொல்லப்படும் சொற்களும், அவற்றொடு கூட்டப்படும் வித்தெழுத்துக்கள் (பீஜாட்சரங்கள்) மனத்தால் சிந்திக்கப்படும் எழுத்துக்களும் ஆம் என்க. `முந்தி நிறுத்தி`` என இயையும். ``முகடு`` என்றது, சுழுமுனையின் உச்சியாகிய ஆஞ்ஞையை. பிராணனை அவ்விடத்து நிறுத்தும் முன்னே அபான வாயு கீழ்ச் செல்லுதல் குற்றமாகாமையின், ``முந்தி முகட்டின் நிறுத்தி`` என்றார், எனவே, ``மூலத்துவாரத்தை முக்காரம் மிட்டிரு`` (பா.571) என மேற் கூறியதும் இதுவேயாதல் அறியப்படும். ``அவன் சிவனாம்`` என மாறுக. இனி `அவ்வாறு செல்பவன்` என்பதைத் தோன்றா எழுவாயாகக் கொள்ளின், ``அவன்`` என்பது பகுதிப் பொருள் விகுதியாம், ``ஆம்`` என்றது ``அப்பாவனையைத் தலைப்படுவன்` என்றவாறு.
இதனால், காயசித்தி பெற்றவன் அதனால் பெறற்பாலதாய பயனைப் பெறுமாறு கூறப்பட்டது.