ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்

பதிகங்கள்

Photo

சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலும் மாமே. 

English Meaning:
Imperishable Life in Yogic Vision

The Lord, of yore, spurned the mighty God of Death
Who ever harasses life;
The Lord rides the Chariot of Fire within;
If you vision His Holy Feet,
Decked with triumphal anklet
You shall for ever live
In the canopied terrace above.
Tamil Meaning:
சிவபெருமான், எவ்வுயிரையும் அதன் உடலினின்றும் பிரித்துக் கொண்டுபோதற்குச் சுற்றிக் கொண்டிருக் கின்ற கூற்றுவனைத் தொன்றுதொட்டே சினந்து, முக்கோண வடிவான மூலாதாரத்தில் உள்ள அக்கினியில் காய்ந்து கொண்டிருக்கின்றான்; ஆகையால், அவ்விடத்தில் அவனது கழல் அணிந்த திருவடியைக் காணப்பெற்றால், பின்னர் நிழலில் நிற்பினும், வெயிலில் நிற்பினும் ஒன்றே; அஃதாவது, அவற்றால் வரும் கேடு ஒன்றுமில்லையாம்.
Special Remark:
``ஈசன்; இரதத்துள் அங்கியுள் சீறி அழலும்` என மாறிக் கூட்டுக. `கூற்றுச் சீறி` என இரண்டாவதன் தொகையாய் இயையும், ``முன்`` என்பது, `முதலாக` எனப்பொருள் தந்தது, `தொன்மை` என்றது, உடம்பு தோன்றிய காலத்தை. முக்கோண வடிவை `இரதம் - தேர்` என்றார். இறைவன் உயிர்களின் உடம்பில் மூலாதாரத்தில் அக்கினியையும், அவ்வக்கினியுள் உடலை நிலைப்பிக்கின்ற ஆற்றலையும் படைத்து, அவற்றை நீங்காது நிறுத்தித் தானும் உடன் நிற்றலானும், அவற்றை அறிந்து, அவ்வக்கினியை எழுப்பி அவ் விடத்தில் அவனைத் தியானிப்பவர், காய சித்தியைப் பெறுவர் ஆகலானும் இவ்வாறு கூறினார். கூறவே, மேற்கூறியவாறு பிராணனையும், அபானனையும் மூலாதாரத்தினின்றும் மேல் எழச் செய்யுங்கால் முதல்வனது திரு வருளை நினைந்து செய்தல் வேண்டும் என்பது பெறப்பட்டது. `திருவருளை நினைந்து செய்யும் முயற்சியே வெற்றி பயக்குமல்லது, அதனை மறந்து செய்யும் முயற்சி ஒன்றொழிய ஒன்றாகும்` என்பது கருத்து.
இதனால் `காய சித்தி உபாயத்தை இறையருள் வழி நின்று` செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது. இவ்வாறன்றி, `உபாயந் தானே காய சித்தியைப் பயந்துவிடும்` என மயங்குவர் பவ யோகிகள் என்க.