ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்

பதிகங்கள்

Photo

மாறா மலக்குதந் தன்மேல் இருவிரல்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசங் கொண்டது காணுமே. 

English Meaning:
Centre Thy Thoughts on Muladhara

Two finger length above the anus
Where faecal matter leaves not
And below the male organ
Is the Linga in Muladhara
Meditate on that Centre,
There resides the Lord of the six adharas;
This my upadesa, rare revealed;
Do take it and vision the Lord.
Tamil Meaning:
அசுத்தத் தன்மை நீங்காதே எருவாய்க்கு இரண்டு விரற்கிடைமேலேயும், தன் சொல்லாற் சொல்லப்படாத குறிக்குக் கீழே யுமாய் உள்ள இடத்தில் தியானியுங்கள் `யாரை` எனின், உடம்பின் கண் ஆறு வகையில் உள்ள இறைவன் அங்கும் உளன். எனவே, அவனையே தியானியுங்கள் என்பதாம். அங்குத் தியானிக்குமிடத்து, ``ஊமை எழுத்து`` எனப்படும் பிரணவத்தால் தியானியுங்கள்.
Special Remark:
இறைவனைத் தியானிக்கும் இடங்களில் ஒன்றாகிய ``மூலாதாரம் எனப்படுவது எருவாயுமன்று; கருவாயுமன்று`` என மேற் (பா.568) கூறியதனை நன்கு வலியுறுத்தற்கு, ``குதந்தன்மேல்`` எனவும், ``இலிங்கத்தின் கீழே`` எனவும், அங்கு இறைவன் இருக்கு மாறு உணர்த்து முகத்தான் ``யாரை`` என்னும் அவாய் நிலையை நிரப்புதற்கு, ``ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன் ``எனவும் கூறினார். மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களிலும் இறைவன் முறையே ``அதோ முகன், பிரமன், மால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன்`` என்பவராக வீற்றிருப்பான். ``அதோமுகம் கீழண்ட மான புராணன்`` ``அதோமுகமாகிய அந்தமில் சத்தி- அதோ முகமாகி அமர்ந்திருந் தானே`` என்பவற்றால், அதோமுக மூர்த்தியின் நிலை பற்றி அறிந்துகொள்க. பிற யோகநூல்கள் மூலாதாரத்தில் விநாயகராய் இருப்பன் எனக் கூறும். கீழ்நோக்கித் தொங்கும் தும்பிமுகத்தை யுடைய விநாயகர் அதோமுகரே. ஐந்து முகத்தோடு அதோ முகமுங் கூடிய அறுமுக மூர்த்தி முருகன். ``உடம்பிடை`` என்பதன்பின், ``உள்ள`` என்பது சொல்லெச்சமாய் நின்றது. ``அண்ணல் அங்கும் உளன்`` என உம்மையை மாற்றி யுரைக்க.
இதனால், அபானனை எழுப்புதலும் இன்றியமையாத தென்ப துணர்த்த வேண்டி, அதனை எழுப்புமாறு கூறப்பட்டது. இதனுள், ``கூறா உபதேசம்`` என்றது ``அபானனைச் சிந்தித் தெழுப்பி`` என்றதனைத் தெரிந்துணர்த்தியவாறு. உபதேசிக்கப் படுவதனை, ``உபதேசம்`` என்றார்.