ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்

பதிகங்கள்

Photo

நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளர்கின்ற வாறே. 

English Meaning:
Yogi Vibrates With Youthfulness

The Fire I saw in Kundalini radiates Kala four
The Prana I kindled and coursed through Centres seven
Pervades the body entire;
With divine life that suffuses the fleshy body as ambrosia;
I grow unto a tender fawn.
Tamil Meaning:
ஈசன் இருத்தலை மேல் நான் தெரிந்து சொல்லிய மூலாக்கினி, `அகார கலை, உகார கலை, மகார கலை, விந்துகலை` என்னும் நான்கு கலைகள், மூலாதாரம் முதல் பிரமரந்திரம் ஈறாக உள்ள ஏழு ஆதாரங்களைப் பொருந்திய பிராண வாயு, உடம்பு முழுதும் உள்ள ஊன் ஆகிய இவைகளையே தன் பசிப் பிணிக்கு மருந்தாக உண்டு, ஒரு மான் கன்று வளர்கின்றவாறு வியப்புடைத்து!
Special Remark:
மான், மகான்` என்பதன் திரிபு. மகான் - பெரியோன்; சிவன். `மகான்` என்பதை மான் எனத் திரித்து அதற்கேற்ப, சிவனது மக்களாகிய உயிர்களை, `கன்றாக` உருவகித்து, `புல்லை உண்ணு தலால் `புல்வாய்` எனப் பெயர் பெற்ற மான் ஒன்று, புல்லை உண்டு வளராமல், நெருப்பு, நிலாவொளி, காற்று, ஊன் என்பவற்றை உண்டு வளர்தல் வியப்பாகின்றது` என நயம்படக் கூறினார். எனவே, மேலை மந்திரத்துட் கூறியவாறு மூலாக்கினியை எழுப்புதல் முதலிய யோகமுயற்சியால் வாழ்நாள் நீட்டித்தல் கூறியவாறாயிற்று. புல்லாவது, ஐம்புல இன்பம்.
இதனால், காயசித்தி உபாயங்களால் அப் பயன் வியக்கத்தக்க வகையில் உளதாதல் கூறப்பட்டது.